ஞாயிறு, 22 டிசம்பர், 2019

டிசம்பர் 22 ,
வரலாற்றில் இன்று.

கடலின் கோரத்தாண்டவத்தில் ஒரு ஊரே ஜலசமாதி அடைந்த தினம் இன்று.

55ஆண்டுகளுக்கு முன் 1964இல் நள்ளிரவு 12:10 மணிக்கு புயல் மற்றும் கடலின் கோரத்தாண்டவத்தால் அழிந்து மண்ணோடு மண்ணாக போன அந்த ஊர் தனுஷ்கோடி.

ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி,

 அழிந்து போன 56ஆம் ஆண்டு துவக்கத்தில் இன்று கால் பதிக்கிறது. இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி.

ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு.

 வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான். இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை.

 ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1,800க்கும் மேற்ப்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.