திங்கள், 9 டிசம்பர், 2019

டிசம்பர் 9,
வரலாற்றில் இன்று.

சோனியா காந்தி பிறந்த தினம் இன்று.

இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள். தனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்னரும், அரசியலில் சேர விரும்பாமல் இருந்த அவர், 1997 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்தார். அதன் பின்னர், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். ஒரு வெளிநாட்டவராக இருந்து, காங்கிரஸ் கட்சியில் நீண்ட கால ஆட்சியில் இருப்பவர் என்று வரலாறு படைத்த அவர், ‘உலகிலேயே மிகச் சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணி’ என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். பரம்பரைப் பரம்பரையாக காங்கிரஸில் இருந்து வரும் நேரு குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கத்தினாராக மாறிய சோனியா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், சாதனைகளையும் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 09, 1946

பிறப்பிடம்: லூசியானா, வெனிடோ, இத்தாலி

பணி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சோனியா காந்தி அவர்கள், இத்தாலியில் உள்ள வெனிடோப் பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் விசென்ஸாவில் உள்ள லூசியானா என்றொரு சிறிய கிராமத்தில், ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாக டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

சோனியா காந்தி அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே அவரது குடும்பம், இத்தாலியில் உள்ள ஆர்பாஸனோ என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தது. இதனால், தனது பள்ளிப்படிப்பை, ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், ஆங்கிலம் கற்க விரும்பியதால், 1964 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது, தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு கிரேக்க உணவகத்தில் பணியாளராகவும் பணிபுரிந்தார்.

இல்லற வாழ்க்கை

1965 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்தார், அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி அவர்கள், சோனியா காந்தியை ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததால், மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்த அவர்கள், 1968 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணமானவுடன் சோனியாவை இந்தியா அழைத்து வந்த ராஜீவ் காந்தி அவர்கள், அவரது இல்லத்திற்கே அவரைத் துணிவாக அழைத்துச் சென்றார். அவர்களின் திருமணத்தை இந்திராகாந்தியும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு குழந்தைகள் பிறந்தனர். இந்திராகாந்தியின் மறைவுக்கு முன்னரும், 1982 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரி பொறுப்பை ஏற்றப் பின்னரும், எந்தவொரு பெருமிதமும் இல்லாமல் இல்லத்தரசியாகவே இருந்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை

பிரதம மந்திரியின் மனைவியாக மாறிய பின்னர், தனது கணவருக்குத் துணையாக அரசியலிலும் ஈடுபட எண்ணிய அவர், 1984ல், அமேதியில் ராஜீவை எதிர்த்து போட்டியிட்ட அவரது தம்பி மனைவியான மேனகா காந்திக்கு எதிராக, தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் முதன்முதலில் களமிறங்கினார். 1991 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், அரசியலில் நுழையாத சோனியா அவர்கள், அவரது மரணத்திற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து தொய்வடைந்ததாலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரின் வேண்டுதலின் பேரிலும், 1997ல் அரசியலில் இறங்கப் போவதாக விருப்பம் தெரிவித்தார். முதலில் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மாறிய சோனியா அவர்கள், அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998 ஆம் ஆண்டிலே, அக்கட்சித் தலைவர் பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற அவரை, அவைத்தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்று அக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 1999ல், அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி என்ற இடத்தில் போட்டியிட்ட அவர், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜ் என்பவரைத் தோற்கடித்து, பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ – தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்