திங்கள், 22 ஜூன், 2020

*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:வாச்சாத்தி வன்முறைக் கொடுமை நிகழ்ந்த தினம் இன்று.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

வாச்சாத்தி வன்முறைக்  கொடுமை நிகழ்ந்த தினம் இன்று.


இது தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம
மக்கள் மீது நடத்திய கொடிய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே  வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும்.

1992 சூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது.

 வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர்.

 பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறை யினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

கிராம மக்கள் சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992ஆம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

 அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வற்புறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவை சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கி நடந்தது.

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.

இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளரும் அடக்கம். மற்றும் வருவாய்த்துறையினர் 6 பேர்.

வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் சூலை 5,2011 முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது .

வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிதக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக