திங்கள், 13 ஜூலை, 2020

*🌐ஜூலை 13, வரலாற்றில் இன்று:ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினால் தமிழகத்தில் போராட்டங்கள் ஆரம்பித்த தினம் இன்று (1953).*

ஜூலை 13, வரலாற்றில் இன்று.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினால் தமிழகத்தில் போராட்டங்கள் ஆரம்பித்த தினம் இன்று (1953).

நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த ராஜாஜியின் ஆட்சிக்கு, அவர் கொண்டு வந்த "புதுக்கல்வித் திட்டம்" பெரும் சோதனையாக அமைந்தது. மாணவ மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜி கொண்டு வந்த புதுக் கல்வித்திட்டம். இதன் மூலம் பள்ளிக்கூடங்களை 2 ஷிப்ட் நடத்தி, அதிகமான மாணவ்ர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். "அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.
அவ்வளவுதான். ராஜாஜி கல்வித் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

"இந்த புதிய கல்வித் திட்டம், குலத்தொழிலை வளர்க்கத்தான் உதவும்;
உழவன் மகன் உழவுத்தொழில் செய்யவேண்டும்; வண்டி இழுப்பவர் மகன் வண்டி இழுக்க வேண்டும்; சவரத் தொழிலாளியின் மகன் சவரம் செய்யவேண்டும். இது நல்ல கல்வித் திட்டம் அல்ல; குலக்கல்வித் திட்டம்" என்று எதிர்க்கட்சியினர் கண்டனக்குரல் எழுப்பினர்.திராவிடர் கழகம், இந்தக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.

"மூன்று மாத காலத்துக்குள் இந்த கல்வித்திட்டத்தை கைவிடவேண்டும்.இல்லாவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்" என்று பெரியார் எச்சரித்தார்.இதையொட்டி தி.மு.கழக செயற்குழு, 1953 ஜுலை 13 ந்தேதி சென்னையில் கூடி "மும்முனைப் போராட்டம்" நடத்த முடிவு செய்தது.

அந்த போராட்டத் திட்டம் வருமாறு:-

1. முதல் அமைச்சர் ராஜாஜி கொண்டு வந்துள்ள அரை நேரப்படிப்பு என்பது குலக்கல்வித் திட்டமாகும். அதை எதிர்த்து ஜுலை 14 ந்தேதி ராஜாஜி வீட்டு முன் ஈ.வெ.கி. சம்பத் மறியல் செய்யவேண்டும்.

2. திருச்சி அருகே உள்ள கல்லக்குடியில், டால்மியா என்ற வடநாட்டுக்காரர் சிமெண்ட் தொழிற்சாலை அமைத்ததால், அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு "டால்மியாபுரம்" என்று பெயர் வைத்துள்ளனர். அதை "கல்லக்குடி" என்று மாற்றவேண்டும். இதற்கான போராட்டத்தை ஜுலை 15 ந்தேதி மு.கருணாநிதி தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

3. தி.மு.க.வின் போராட்டங்களைப் பிரதமர் நேரு "நான்சென்ஸ்" என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜுலை 15ல் ரெயில் நிறுத்தப்போராட்டம் நடத்த வேண்டும்.

இந்தப் போராட்டம் பற்றிய தீர்மானங்களைச் செயற்குழு நிறைவேற்றிக்கொண்டிருந்தபோதே அங்கு துணை போலீஸ் கமிஷனர் எப்.வி.அருள், ஒரு போலீஸ் படையுடன் வந்தார்.

அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், எஸ்.வி.நடராசன் ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்."நான்கு தம்பிமார்களுடன் நான் சிறை சென்றாலும், போராட்டத்தை நடத்த ஆயிரக்கணக்கான தம்பிமார்கள் இருக்கிறார்கள்" என்றார்,அண்ணா. ஜுலை 14 ந்தேதி, ராஜாஜி வீட்டு முன் மறியல் செய்ய இருந்த ஈ.வெ.கி.சம்பத் கைது செய்யப்பட்டு விட்டதால் அவருக்குப் பதிலாக சத்தியவாணிமுத்து மறியல் நடத்தச் சென்றார். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.

ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பகுதியினர், இத் திட்டத்தை கைவிடும்படி ராஜாஜியிடம் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், காமராஜரின் தீவிர ஆதரவாளருமான டாக்டர் வரதராஜீலு நாயுடு, "கல்வித் திட்டத்தை ராஜாஜி கைவிடவேண்டும். அல்லது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என்று வற்புறுத்தியார்.
ராஜாஜி மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.ஆந்திரா பிரிந்து சென்றபின் சென்னை சட்டசபையில் காங்கிரசுக்கு கணிசமான மெஜாரிட்டி பலம் இருந்தது.
எனினும், காங்கிரசில் ஒரு பகுதியினர் ராஜாஜியை எதிர்த்து ஓட்டளிக்கத் தயாராகி விட்டனர்.எனவே, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறக் கூடிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ராஜாஜிக்கு ஆதரவாக பிரதமர் நேரு ஒரு அறிக்கை வெளியிட்டார். முதல் மந்திரியாக ராஜாஜி நீடிக்கவேண்டும் என்ற தமது விருப்பத்தை அதில் தெரிவித்து இருந்தார்.இதைத்தொடர்ந்து, ராஜாஜி எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரு தூதுக்குழுவாக டெல்லிக்கு சென்று, நேருவை சந்தித்தனர். "ராஜாஜியின் கல்வித் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது எனவே, கல்வித் திட்டத்தை ராஜாஜி வாபஸ் பெற்றால், அவரை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம். பிடிவாதமாக கல்வித் திட்டத்தை திணித்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அழிந்துவிடும்" என்று கூறினார்கள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட நேரு, "உங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம்" என்று கூறிவிட்டார்.இதன் காரணமாக, "பதவியா, கல்வித் திட்டமா?" என்ற கேள்வி ராஜாஜி முன் எழுந்தது. ராஜாஜிக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தனக்கு சரி என்று தோன்றும் கருத்தை எப்போதுமே மாற்றிக்கொள்ள மாட்டார். எனவே, 24.3.1954 அன்று சட்டசபைக்கு வந்த ராஜாஜி, "எனக்கு உடல் நலம் இல்லை. எனவே முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று அறிவித்தார்.

கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்தபோது, "ஒவ்வொரு மனிதனுக்கும், பதவியைவிட அவனது சுயமரியாதைதான் முக்கியமானதாகும்" என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக