புதன், 15 ஜூலை, 2020

*🌷ஜூலை 15,* *வரலாற்றில் இன்று:கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 15,
வரலாற்றில் இன்று.

கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று.

காமராஜர் பிறந்த நாள். இதையொட்டி, விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து ஒரு பகிர்வு இது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் எழுதிய இக்கட்டுரை விகடனில் 11.09.1966 இதழில் வெளியானது.
---------------------------------------------------------------------

காந்தி வழியில் காமராஜ்!

காமராஜரிடம் பெருமதிப்புக் கொண்டவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். விகடனில் காமராஜ் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். குறிப்பாக, காமராஜர் 1966-ல் முதன்முறையாக அந்நிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது, அது பற்றி, 'சோஷலிச நாடுகளில் மக்கள் தலைவர்' என்னும் தலைப்பில் விகடனில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையின் முதல் அத்தியாயத்திலிருந்து ஒரு துளி இங்கே...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் ஆண்டின் சுதந்திர நாள், தமிழ்நாட்டின் வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய திருநாள். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், அதுநாள் வரை கண்டிராத மக்கள் கூட்டத்தை அன்றுதான் கண்டது. சென்னை நகர வீதிகளுக்கு எண்ணிலடங்கா வாகனங்களைச் சுமக்கும் வாய்ப்பு, அன்றுதான் கிட்டியது. கண் ணுக்கெட்டிய தூரம் வரை சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும், கார் களும், குதிரைகளுமே காட்சி அளித்தன.

இத்தனையும் எதற்காக?

முதன்முறையாக அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்துவிட்டுச் சென்னை திரும்பிய, இந்தியாவின் இணையில்லாத் தலைவர் காமராஜ் அவர்களை வரவேற்கத்தான்! சோஷலிச நாடுகளுக்குச் சென்று திரும்பிய மக்கள் தலைவர் காமராஜ் அவர்களுக்குச் சென்னை மாநில மக்கள் மகத்தான வரவேற்பளித்தார்கள். விண் அதிர 'வாழ்க கோஷம்' ஒலிக்க, வானிலிருந்து மலர் மாரி பொழிய, சென்னை நகர வீதிகளிலே பவனி வந்தார் பாரதத் தலைவர்.

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலே நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசும் போது தலைவர் காமராஜ் சொன்னார்: "சோவியத் ரஷ்யாவுக்கும், கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, பல்கேரியா, யூகோஸ்லேவியா போன்ற நாடுகளுக்கும் நான் சென்று வந்தேன். அந்த நாடுகளுக்கெல்லாம் வேடிக்கை பார்க்க, ஊர் சுற்றிப் பார்க்க நான் போகவில்லை. அங்கெல்லாம் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்னென்ன வசதிகளை மக்கள் தேடிக்கொள்கிறார்கள், என்னென்ன வசதிகளை அரசாங்கம் தேடிக் கொடுத்துள்ளது என்று பார்க்கவே போனேன்."

ஆமாம்! காமராஜ் அவர்கள், ஏதோ பொழுதுபோக்குக்காகவோ, உல்லாசப் பிரயாணம் செய்யவேண்டும் என்றோ அந்நிய நாடுகளுக்குப் போகவில்லை. அந்நாடுகளைக் கண்டு, அந்நாட்டு மக்களிடம் பேசி, அதன் மூலம் நம் நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று அறியவே சென்றார்.

காமராஜ் அவர்களின் அந்நிய நாட்டு விஜயத்தில் எழுந்த முதல் பிரச்னை, அவருடைய உடைப் பிரச்னைதான். காமராஜ் அவர்கள் எந்த உடையில் செல்வது என்பதுதான் எல்லோருக்கும் பெரும் பிரச்னையாக இருந்தது.

"ரஷ்யாவில் குளிர் மிகவும் அதிகம். எனவே கோட்டும் பான்ட்டும் போட்டுக்கொண்டு தான் செல்லவேண்டும்."

"ஓவர் கோட் இல்லாமல் அங்கு போவதா? அது எப்படிச் சாத்தியம்?"

"கம்பளித் துணிகள் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்!"

இப்படி, நண்பர்கள் எல்லோ ரும் பலவித ஆலோசனைகள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், இந்த உடை விஷயம் காமராஜ் அவர்களைப் பொறுத்த வரை ஒரு பிரச்னையாகவே இருக்கவில்லை. தாம் வழக்கமாக அணியும் அதே வேஷ்டி சட்டையுடன்தான் போவது என்று தீர்மானித்துவிட்டார். இது பலருக்குப் பெரிய அதிசயமாக இருந்தது.

ஆனால், என்னைப் பொறுத்தவரை இதில் அதிசயப்பட எதுவும் இல்லை. அவரை நன்கு அறிந்தவர்களுக்கு, இதில் வியப்புக்கு இடமில்லைதான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர், தமிழக முதல் அமைச்சரானபோது பலர் அவரிடம் மாறுதல்களை எதிர்பார்த்தார்கள்.

'இனி, காமராஜ் சர்க்கார் மாளிகைக்குப் போய்விடுவார்; புதிய கார் வைத்துக்கொள்வார்; உடையில்கூட ஏதாவது மாறுதல் இருக்கும்' என்று அநேகர் நினைத்தார்கள். ஆனால், அவர் எதையும் மாற்றவில்லை. முதலமைச்சரான பிறகும், வழக்கமாகத் தாம் வசிக்கும் திருமலைப் பிள்ளை வீதியில் உள்ள வீட்டிலேயேதான் இருந்தார். அதற்கு முன்பு தாம் வைத்திருந்த அதே வண்டியைத்தான் உபயோகப்படுத்தினார். சட்டை மாறவில்லை; வேஷ்டி மாறவில்லை; துண்டும்கூட மாறவில்லை.

காமராஜ் அவர்கள் தமது தோற்றத்திலே எந்தவிதமான மாற்றத்தையும் விரும்பியதில்லை. அவர் விருப்பமெல்லாம், இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதுதான்.

வழக்கமாகத் தாம் அணியும் ஆடையிலேயே வட்ட மேஜை மகாநாட்டிற்குக் காந்திஜி சென்றார். அதன் பின்னர், அந்த முறையில் அந்நிய நாட்டுக்குச் சென்ற தலைவர், காமராஜ் அவர்கள்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக