வெள்ளி, 31 ஜூலை, 2020

ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று

ஜூலை 31,  வரலாற்றில் இன்று.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று
.

பாண்டிய மண்டலத்தின் படைத்தளபதியாக இருந்த கரியான் சர்க்கரை என்ற தளபதிக்கு பாண்டி வேந்தன் காங்கயத்தை ஒட்டிய நத்தக் கரையூரை பரிசாக அளித்தான். இந்த சர்க்கரை மரபில் பிறந்தவர்தான் சின்னமலை. பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. பழையகோட்டைக்குப் பக்கத்தில் மேலப் பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தார் என்று பழையகோட்டை ஜமீன் பரம்பரைக் கணக்குப் பிள்ளையின் வீட்டில் அண்மையில் கிடைத்த ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

1760இல் மைசூர் மன்னர் ஆனார் ஹைதர் அலி. அப்போது கொங்குநாடு மைசூரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த்து. தென் கொங்கு மண்டலத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம் மைசூருக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு எதிராகப் போரில் தோற்று விட்டார் ஹைதர் அலி.

மைசூருக்குச் செல்ல வேண்டிய வரிப்பணத்தைப் பறித்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார் தீர்த்தகிரி. திவானுக்கு என்ன பதில் சொல்வது என்று சிப்பாய்கள் கேட்டதற்கு, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டான்” என்று சொல் என்றாராம் தீர்த்தகிரி. அது முதலாக, சின்னமலை என்ற பெயர் நிலைத்து விட்டது.

ஹைதர் அலிக்குப் பிறகு பதவியேற்ற திப்பு சுல்தானை சந்திக்கச் சென்ற சின்னமலை அங்கேயே போர்ப் பயிற்சி பெற்றார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சின்னமலையை தளபதியாக்கினார் திப்பு சுல்தான்.

மாலஹள்ளி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் 40,000 சிப்பாய்களை விரட்டியடித்தார் சின்னமலை. பின்னர் 1799ஆம் ஆண்டு நான்காவது மைசூர் போரில் திப்பு சுல்தான் சேனை வீழ்ந்த்து. தப்பிவந்த சின்னமலை, நொய்யல் ஆற்றின் கரையில் ஓடாநிலை என்னும் இடத்தில் வலுவான கோட்டை ஒன்றை அமைத்துக் கொண்டார்.

கோவை கோன் என்றழைக்கப்பட்ட சின்னமலை ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தார். திப்புவின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமாகி விட்டன. ஆனால் கொங்கு மண் மட்டும் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்த்து.

சின்னமலையை வீழ்த்த வேண்டும் என்று கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் திரண்டு வந்த ஆங்கிலேயப் படைக்கும் சின்னமலையின் படைக்கும் இடையே 1801ஆம் ஆண்டு முதல் போர் நிகழ்ந்தது. வெற்றி சின்னமலைக்கே கிடைத்த்து. 1802ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் மீண்டும் படை திரட்டி வந்தான். அவனுடைய தலையைக் கொய்து காட்சிக்கு வைத்தார் சின்னமலை.

சின்னமலையின் படைத்தலைவர் கருப்பச் சேர்வை பிரெஞ்ச் மொழி பயின்றிருந்தார். பிரெஞ்சுக்காரர்களை வரவழைத்து துப்பாக்கிப் பயிற்சிகள் தரப்பட்டது. பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொண்டார் சின்னமலை.

1804ஆம் ஆண்டு கர்னல் ஹாரிஸ் தலைமையில் ஆங்கிலேயப் படை சின்னமலையுடன் மோதியது. அப்போதும் சின்னமலை வெற்றி பெற்றார். ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் பெரும்பெரும் பீரங்கிகளுடன் புறப்பட்டனர். பீரங்கிகளை எதிர்த்துப் போரிட முடியாது என்பதால், பழனி மலைப்பகுதியில் இருந்த கருமலையில் தஞ்சம் புகுந்து விட்டார் சின்னமலை. அவரது கோட்டை தகர்க்கப்பட்டது.

வீரத்தால் அவரைப் பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் தமது வழக்கமான சூழ்ச்சியைப் பயன்படுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் வாய்த்தது போல, சின்னமலையைக் கைது செய்ய அவருடைய சமையல்காரனாக இருந்த நல்லப்பன் வாய்த்தான். சூழ்ச்சியால் சின்னமலையைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் 1805 ஜூலை 31ஆம் நாள் அவரைத் தூக்கிலிட்டனர்.

வெள்ளையரை எதிர்த்து போரில் மூன்றுமுறை வெற்றி பெற்ற சின்னமலையின் வரலாறு இன்னும் பலருக்கும் தெரியாது, முழுமையாகவும் தெரியாது.

சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக