திங்கள், 27 ஜூலை, 2020

மறுகாலனியாக்கம் கல்வி பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு ! பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

மறுகாலனியாக்கம் கல்வி

பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

வினவு செய்திப் பிரிவு -July 27, 2020

அன்பார்ந்த நண்பர்களுக்கு,

பள்ளிக் கல்வியை உலக வங்கியிடம் ஒப்படைப்பதற்கான புதிய திட்டத்தில் கடந்த ஜூன் 24 ம் தேதி அன்று மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. ‘மாநிலங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்ச்சியை வலுப்படுத்துதல்’ ‘Strengthening Teaching-Learning and Results for States’ (STARS) என்ற இத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்தியாவின் ஆறு மாநிலங்களில் சோதனைத் திட்டமாக அமல்படுத்தப்படும்.

இதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை தனியார்களிடம் ஒப்படைப்பதற்கான வேலையை மோடி அரசு செய்துள்ளது. இதனை கண்டித்து கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு (All India Forum for Right to Education – AIFRTE) இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்தது. இக்கடிதம் STARS திட்டம் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை கொடுக்கும் என்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்து தருகிறோம்.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு – சென்னை 

***
பள்ளி கல்வியினை உலக வங்கியிடம் ஒப்படைக்கும் இந்திய அரசின் திட்டத்தை கண்டித்து கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர்க்கு திறந்த கடிதம்

அன்புள்ள பிரதமர்க்கு,

“வாருங்கள் தன்னிறைவு கொண்ட பாரதத்தை உருவாகுவாம்”,  இது சமீபத்தில் நீங்கள் செய்த முழக்கம். பிறகு ஏன் இந்தியாவின் பள்ளி கல்வியை வடிவமைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உலக வங்கிக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்?

கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு(All India Forum for Right to Education – AIFRTE), 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பாகும். இது ஜுன் 2009 முதல் 22 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதசங்களில் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு உலக வங்கியனை ‘மாநிலங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்ச்சியை வலுப்படுத்துதல்’ ‘Strengthening Teaching-Learning and Results for States’ (STARS) என்ற திட்டத்தின் மூலம் பள்ளிக் கல்வியில் தலையிட கடந்த 2019 அக்டோப்பரில் அனுமதித்ததோடு இல்லாமல் உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்திலும் ஜூன் 24 ,2020 அன்று கையெழுத்திடுவதற்கான தயாரிப்பு வேலைகளை செய்து வருவதைக்  கண்டு AIFTRE பெரும் கலக்கத்தையும் வேதனையும் அடைந்துள்ளது. STARS திட்டம் ஆறு மாநிலங்களில் viz., ஹிமாசல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மஹாராக்ஷ்ட்ரா, ஓடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சோதனைத் திட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.

1. உலக வங்கியின் STARS திட்டமானது தந்திரமாக கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தலையிட சாமக்ரா சிக்க்ஷா அபியான் திட்டத்தின் (Samagra Siksha Abhiyan) சில குறிப்பிட்ட நிலைக்களை குறிவைத்துள்ளது.

Early Childhood Care Education -லிருந்து ஒட்டு மொத்த பள்ளி கல்விக்குமான கற்றல்-கற்பித்தலின் உள்ளடக்கம் (teaching-learning content), பயிற்சிகள் (practices) மற்றும் வெளிப்பாடுகளில்(outcomes) பங்கெடுப்பது,
மேற்கூறியவற்றைச் செயல்படுத்தவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் அவர்களை கண்காணிப்பது,
“தகுதி அடிப்படையிலான” கற்றல் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல்,
நிர்வாக சீர்திருத்தங்களை திட்டமிடுவது மற்றும் அமல்படுத்துவது. இது வெறும் நிர்வாகத்தோடு மட்டுமல்லாமல், திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒருபுறம் கல்வி அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதில் தொடங்கி, மறுபுறம் பெற்றோரையும் அதில் பங்கேற்க வைப்பதற்கு பயிற்சியளிப்பது வரை உள்ளடக்கியது.

கல்வி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களிலும் முன்மொழியப்பட்டுள்ள இச்சீர்திருத்த நடவடிக்கைகளில் உலக வங்கியின் கட்டுப்பாடு மற்றும் தலையீடு, STARS திட்டத்தின் மொத்த செலவினங்களில் உலக வங்கியின் பங்கான 14.93%  ஒப்புக் கொண்ட  தேதியிலிருந்து ஆறு வருடங்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது.  இத்திட்டத்திற்கான மொத்த செலவில் மத்திய அரசு 53.43% -மும் மாநில அரசுகள் 31.64% மும் ஏற்றுக்கொள்ளும்.

மேலும், 2019-25 ஆம் ஆண்டுக்கான  சமக்ரா சிக்க்ஷா அபியான் (இதில் STARS ஒரு அங்கமாக இருக்கும்) திட்டத்திற்காக இந்திய அரசு செலவிடப் போகும் மொத்தத் தொகை 36 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது (பிரிவு 14, பக்கம் 7, ஜூன் 3, 2020 தேதியிட்ட STARS திட்ட தகவல் ஆவணம்).  STARS திட்டத்தில் உலக வங்கியின் பங்களிப்பானது  மத்தியஅரசு  மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்கள் சேர்ந்து பள்ளி கல்விக்காக (சமக்ரா சிக்க்ஷா அபியான்) செலவழிக்கும் தொகையில் வெறும் 1.4% மட்டுமே. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு  தேவையான 98.6% நிதியை அரசாங்கத்தால் திரட்ட முடியும் போது, கூடுதல் 1.4% நிதியை ஏன் திரட்ட முடியாது?[1]

இதே விகிதத்திலான  பங்களிப்பைத்தான்  1990 -களில் அமல்படுத்தப்பட்ட மாவட்ட ஆரம்ப கல்வித் திட்டத்திற்கு (District Primary Education Program – DPEP) உலக வங்கி செய்தது. உலக வங்கியால் வடிவமைக்கப்பட்டு நிதியுதவி செய்யப்பட்ட DPEP திட்டம், 1993-2002 ஆண்டுகளுக்கிடையில் 18 மாநிலங்களில், கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள பாதி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் அரசு நிதியளிக்கும் தொடக்கப்பள்ளிகளின் (வகுப்பு I-V) தரம் விரைவாக மோசமடைய வழிவகுத்தது. பொது மக்களிடையே, குறிப்பாக எஸ்சி / எஸ்டி / ஓபிசி / முஸ்லிம் /பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் பிற வறிய பிரிவினரிடையே அரசு தொடக்கப் பள்ளிகள் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்தது. இதன் விளைவாக, பள்ளி கல்வியில் தனியார்மயம் மற்றும் வணிகமயமானது DPEP க்கு முந்தைய காலங்களில் இருந்ததை விட DPEP க்கு பிந்தைய காலத்தில் அதிவேகத்தில் அதிகரித்தது.

இதுவே உலக வங்கியின் மைய கோட்பாட்டு திட்டமாகும். உலக வங்கி என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அதன் முன்னேற்றத்திற்காகவும்  உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.  உலக வங்கியின் DEPE திட்டத்தின் நோக்கமே  6-14 வயதுக்குட்பட்ட 20 கோடி குழந்தைகள் படிக்கின்ற இந்திய தொடக்கப் கல்வியை (I-VIII வகுப்பு) கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கான ‘சந்தையாக’ மாற்றுவதும் , அதன் மூலம் கல்வியை வணிகமயமாக்குவதும் தான். இந்திய அரசு மீது சர்வதேச நாணய நிதியம் (Internationl Monetry Fund – IMF) திணித்த ‘கட்டமைப்பு சரிசெய்வதற்கான சீர்திருத்தங்களின் (Structural Adjustment Reforms)’ காரணமாக 1990 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% மாக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து 2003 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% க்கும் குறைவான அளவுவே ஒதுக்கப்பட்டது.

இதன் விளைவுகளை உலக வங்கியானது  தனது நோக்கத்தை அடைவதற்கு பயன்படுத்திக்கொண்டது. இதனால் பள்ளிகளிலிருந்து ஏராளமான குழந்தைகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவது மட்டுமல்லாமல், அடிப்படை உரிமையாக இருந்த கல்வியானது,  தற்போது அவர்கள் நெருங்கமுடியாத அளவிற்கு “மிகவும் விலை உயர்ந்ததாக” மாறியது.   இந்தியாவின் ஆரம்பக் கல்வியில் புகுத்தப்பட்ட DPEP திட்டத்தின் எதிர்மறை அனுபவம் புறக்கணிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல்  சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abiyan – SSA)  திட்டத்தில்  உலக வங்கியின் தலையீடு 2002 லிருந்து  தற்போது வரைத் தொடர்கிறது.

2. STARS திட்டத்தின் மூலம் இந்திய கல்வித்துறையில் உலக வங்கியின் தலையீடு மூன்றாவது முறையாக அனுமதிக்கப்படுகிறது. இந்த முறை உங்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘பண்டைய காலத்திலிருந்தே இந்தியா உலகிற்கே குருவாக  இருந்துள்ளது (Vishwa Guru since ancient times)’ என்று உங்கள் அரசாங்கம் கூறிக்கொண்டாலும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சமூக மாற்றத்திற்கான கல்விக் கோட்பாடுகளையும் முன்முயற்சிகளையும் கொண்ட சிறந்த மரபு இருந்துள்ளதை பற்றி தெரியாமல் உள்ளீர்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலங்களிலிருந்தே கல்வியை ஜனநாயகப்படுத்துவதற்காக நடைப்பெற்ற சாதி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச ஆரதவு மரபுகளிலிருந்து உங்கள் அரசாங்கம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. உதாரணமாக ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் மற்றும் பாத்திமா பி, தாதாபாய் நவ்ரோஜி, சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ், கோபால்கிருஷ்ணா கோகலே மற்றும் கர்மவீர் பாகுராவ் பாட்டீல் (மகாரஷ்டிரா); அயோதி தாஸ், சிங்காரவேலர் மற்றும் பெரியார் (தமிழ்நாடு); நாராயண் குரு மற்றும் அய்யங்காலி (கேரளா); குண்ட்குரி வீர்சலிகம் மற்றும் குராஜாதா அப்பராவ் (பிரிக்கப்படாத ஆந்திரா); குட்முல் ரங்க ராவ் மற்றும் கிருஷ்ணராஜா வாடியார் IV (கர்நாடகா); ஈஸ்வர்சந் வித்யாசாகர், தாகூர் மற்றும் ரோக்கியா பேகம் (மேற்கு வங்கம்); சையத் அஹ்மத் கான் மற்றும் மதன் மோகன் மால்வியா (உத்தரபிரதேசம்); லாலா லஜ்பத் ராய் மற்றும் ஷாஹித் பகத் சிங் (பஞ்சாப்); டாக்டர் ஜாகிர் ஹுசைன் (டெல்லி); சயாஜிராவ் கெய்க்வாட் III மற்றும் கிஜுபாய் பதேகா (குஜராத்); Rev. தாமஸ் ஜோன் மற்றும் ராம்கே டபிள்யூ மோமின் (மேகாலயா); Rev. எஃப். டபிள்யூ. சாவிட்ஜ் (மிசோரம்); ஹிஜாம் இராபோட் (மணிப்பூர்); குய்சாங் மேரு ஜெலியாங் (நாகாலாந்து); சுதந்திர மாநிலங்களின் முற்போக்கு ஆட்சியாளர்களான பரோடா மற்றும் கோண்டல் மகாராஜாக்கள், கோலாப்பூர், மைசூர் மற்றும் திருவிதாங்கூர் மகாராஜாக்கள் மற்றும் போபாலின் பேகம்ஸ்; இறுதியாக, 1930 களில் காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதி பற்றிய விவாதங்கள் மேலும் அவர்கள் இருவரும் தனித்தனியா சமூக மாற்றத்திற்கான கல்வி பற்றி முன்வைத்த யோசனைகள் எனக் கூறலாம்.

கல்வி சார்ந்த  இந்த உரையாடல்கள் சுதந்திர போராட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1920 ல் நாக்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஏகாதிபத்திய நிறுவன அமைப்புகளை புறக்கணிக்கவும் சொந்த நிறுவன அமைப்புகளை  உருகவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1938 ல் நடைபெற்ற ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் சுயசார்பான இந்திய கல்வியை ஒரு புதிய அடித்தளத்தின் மீது நிறுவவேண்டுமென  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது சுதந்திர போராட்ட இயக்கங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பங்களிப்பிற்கும் வழிவகுத்தது. 1944 ஆம் ஆண்டில், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுவானது (Central Advisory Board of Education – CABE) கல்வியின் நோக்கம் முழுமையானது – தனிநபரின் ஆளுமை மற்றும் திறமைகளை வளர்பது, வாழ்வாதாரத்திற்கான அடிப்படையை உருவாக்குவது மற்றும் நவீன ஜனநாயக அரசுக்கான  சுகந்திர குடிமக்களை வளர்ப்பது எனக் கூறியது.

செழிப்பான, பல்வகைப்பட்ட மற்றும் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்ட இக்கருத்துக்கள் அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அரசியலமைப்பின் நெறிமுறைக் கேட்பாடு 45 க்கு பொருத்தமாக அனைவரும்  தரமான கல்வி பெறுவதற்கான சம உரிமையை உறுதிப்படுத்துவதை இந்திய அரசின் பொறுப்பாக்கியது. 1993 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம் கல்வி என்பது அடிப்படை உரிமை என்றும் அதனை அமல்படுத்துவது அரசின் கடமை என்றும் கூறியது.

3. நிதியாதாரங்களின் பற்றாக்குறை அல்லது கற்பித்தல் முறையில் போதிய நிபுணித்துவமின்மை போன்ற காரணங்கள்தான் உலக வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்ற STARS இந்திய அரசு ஒப்புக்கொள்ள தூண்டுதலாக இருந்தது என்பது பொய் என மேற்கண்ட தரவுகளே உணர்த்துகின்றன. உண்மை என்னவென்றால், உங்கள் அரசாங்கமும், 1990 களில் இருந்து அடுத்தடுத்த வந்த மற்ற மத்திய அரசாங்கங்களைப் போல, உலக வங்கியின் சந்தை சித்தாந்தத்துடன் முற்றிலும் உடன்படுகிறது. ஆகையால், சமூக நீதி மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமத்துவ கல்வி முறையை உருவாக்க வேண்டுமென்ற அரசியலமைப்பின் முக்கியத்துவத்துற்கு எதிரானதாக உள்ளது

உலக வங்கியைப் போலவே, உங்கள் அரசாங்கமும் அரசு கல்வி முறையை (state-funded education system) அகற்றிவிட்டு அதற்கு பதிலாக  கார்பரேட்மயமாக்கப்பட்ட  மற்றும் மேல்தட்டுக்கான கல்வி முறையாக  மாற்ற விரும்புகிறது,  இக்கல்வி முறை நம் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85% உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முஸ்லிம்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும், உடல் ஊனமுற்றோர்களுக்கு எட்டாததாகவே இருக்கும். இவ்வாறு  கல்வியிலிருந்து அதிக அளவில் வெளியேற்றப்படுவது – வர்க்கம், சாதி, இனம், மதம், பாலினம், மொழி, பிறந்த இடம், இயலாமை; தகுதி, குறைந்த செயல்திறன்,; குறைந்த வருகை பதிவு; சமூக நீதித் திட்டங்களைத் திரும்பப் பெறுதல் (மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொள்கை, மற்றும் போதுமான கல்லூரி விடுதிகள், மற்றும் கல்வி உதவித்தொகை); பெரும்பான்மை மக்களை டிப்ளமோ படிப்புகளுக்கு தள்ளுப்படுவது போன்ற சாக்குகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும்.

4. கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த நாடும் நாட்டு மக்களும் முற்றிலுமாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிற நிலையில், இந்திய அரசும் உலக வங்கியும் STARS திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தீவிரம் காட்டுகின்றன. நிர்வாக முன்னேற்பாடுகள் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் திட்டமில்லாமல் செய்த ஊரடங்குத் தளர்வுகளால் நோய் தொற்றானது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நோய் உருவாகியுள்ள பயமும் துன்பங்களும் இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலிகள், சுயதொழில் செய்பவர்கள், வீடற்றவர்கள் மற்றும் வேலை இழந்த லட்சக்கணக்கானோர் என யாரையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் புலம் பெயர் தொழிலாளர்களின் மோசமான நிலையானது 1947 பிரிவினையில் இடம் பெயர்ந்த மக்கள் அடைந்த வேதனையோடு ஒப்பிடக்கூடியதாக உள்ளது. பொதுசுகாதார அவசரநிலை நிலவும் இச்சூழலில் மக்களின் முதன்மையான கவனமும் STARS திட்டத்தை நோக்கி இருக்காதென்பதால் இத்திட்டத்தினை கிடப்பில் போடுவதே சரியானதாகும். STARS திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும், அதனை முன்னெடுத்துச் செல்வதற்கும் இத்திட்டத்தின் மீதான மக்களின் கருத்துகளையும் கேட்டவில்லை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இத்திட்டம் பற்றி விவாதங்களையும் நடத்தப்படவில்லை. இத்திட்டத்தை பற்றிய ஒரு திறந்த  தேசிய அளவிலான விவாதம் இல்லாமல், இதனை இந்திய மக்கள் மற்றும் குழந்தைகள் மீது திணிப்பதற்கான  அதிகாரமோ அல்லது தார்மீக உரிமையோ இந்திய அரசுக்கு கிடையாது. இந்த திட்டதின் பேராபத்தை பார்க்கும் போது STARS திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று கோருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

5. இந்திய அரசு, மேற்சொன்ன கருத்துக்களை புறந்தள்ளுவதாளும் உலக வங்கியோடு முழுசக்தியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாலும், STARS திட்டத்தின் சில முக்கிய குறைபாடுகளையும் அது எவ்வாறு இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையான அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதற்கான உரிமைக்கு பேராபத்தாக உள்ளது என்பதை கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது.

5.1 நெருக்கடிகளுக்குள்  நிறைந்துள்ள தற்போதைய கல்வி அமைப்பை  சீர்திருத்துவதற்கு “அரசு சாராத அமைப்புகள் (Non-sate actors) ” பங்கு முக்கியமானது என்று STARS திட்டம் கருதுகின்றது.  இதில் தனியார் கார்ப்பரேட் முதலீட்டாளர்கள்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடிமை சமூகம் / தொண்டு / மத அமைப்புகள்; கல்விக் கட்டணம் செலுத்தும் பெற்றோர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றவை அடங்கும். அதேவேளையில் கல்வி அமைப்பின் குறைபாடுகளை சரி செய்வதில் இந்திய அரசுனுடைய கடப்பாடு இல்லை என்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மாநில அரசும், அதன் ஆலோசனை பெறாமல் வடிவமைக்கப்பட்ட STARS திட்டத்தினை அமல்படுத்துவதை கண்காணிக்க மட்டும் செய்ய முடியும்.

5.2 உலக வங்கி மற்றும் கார்ப்பரேட்களால் ஊக்குவிக்கப்பட்ட பல்வேறு வகையான PPP (Public Private Partnership – அரசு தனியார் கூட்டு) திட்டங்களின் எதிர்மறையான விளைவுகளை  இந்தியா ஏற்கனவே கண்டிருக்கிறது.  PPP -ன் செயல்தந்திரங்கள் கல்வியை தனியார்மயமாக்கியுள்ளன மற்றும் கல்வி செலவுகளால் உண்டாகும் பொருளாதார சுமையை குடும்பத்தின் மீது திணித்துள்ளது. கல்வி வணிகத்திற்கான ஒரு “சந்தையை” உருவாக்கியுள்ளதின் மூலம்  பொது சொத்துக்கள் மற்றும் நமது இளைஞர்களின் வாழ்க்கையின் மீது தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளார்கள். இவர்கள், பட்ஜெட் நிதி வெட்டுக்கள், பள்ளிகள் இணைப்பு / மூடுவதற்கான திட்டங்கள், கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்க வவுச்சர் திட்டங்கள்,  குறைந்த பட்ஜெட்டிலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் போன்றவை மூலம் பொது கல்வி முறையை அழிப்பதற்கான முயச்சிகளை முன்னெடுத்து செல்கிறார்கள்.

5.3 PPP சிறந்த தரமான கல்வியை வழங்காது. இது பின்தங்கிய மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதை அதிகப்படுத்துகிறது.  துரதிஷ்டவசமாக இதற்கான சட்ட அங்கீகாரம் RTE ACT 2009 மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் 25% மாணவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே பள்ளிகளில் செலுத்தும். இதன் வாயிலாக அரசு நிதி தனியாருக்கு மடைமாற்றப்படுகிறது.

5.4 STARS திட்டம்  கல்வியின் “உள்ளடக்கம்” மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்முறை ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தறாமல் “செயல் திறன்களுக்கே (competencies)” முக்கியத்துவம் தருகிறது. இத்திட்டத்தின் படி கல்வியின் நோக்கமானது வேலைவாய்ப்பு சந்தையில் கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்  மற்றும் உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான “திறமைகளால்” தீர்மானிக்கப்பட வேண்டியதாகக் காண்கிறது.

5.5 STARS திட்டம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட கற்றல் வெளிபாடுகளுக்கான (outcomes) அளவுகோல்களைக் கொண்டு கல்வியின் சாதனைகளை கண்காணிப்பதற்கான மதிப்பீடு முறைகளை உருவாக்குவதற்கு கவனம் தருகிறது.  இது சமூகவயப்பட்ட கற்றல்-கற்பித்தல் செயல்முறைக்கு பதிலாக ஆசிரியர்கள்  முன்னமே தயாரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை வழங்குபவராகவும் மாணவர்கள் அதனை  பெறுபவர்களாகவும்  சுருக்குகிறது.

5.6 கல்வி முறையிலுள்ள(education system) அனைத்து சிக்கல்களுக்கும் தொழில்நுட்ப உதவியுடன் விரைவான – தீர்வுகளை வழங்க STARS திட்டம் முக்கியத்துவம் தருகிறது. கல்வி முறையிலுள்ள சிக்கல் அனைத்தும் பல பத்தாண்டுகளாக பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கற்பித்தல் உபகரணங்களில் குறைபாடு,  சிறந்த ஆசிரியர்  பயிற்சியினை வழங்குவதில் தோல்வி, போதுமான நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது,  ஆகியவற்றின் விளைவாக உருவாக்கப்பட்டது தான்.

5.7 தற்போது பிரபலமாக உள்ள இணையதள கற்றல்-கற்பித்தல் முறையை அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்கான ஒரு தீர்வாகவும் அறிவை (homogenizing knoeledege) டிஜிடல் நுகர்வு அலகுகளாகவும் (digitally consumable units) மாற்றுவதற்கு  STARS திட்டம் தீவிரமாக பரிந்துரைக்கிறது. இணையதள  கற்பித்தல் முறையின் வரம்புகள் (pedagogical limitations) பற்றியோ அல்லது 5 முதல் 24 வயது வரையிலான குழந்தைகள் உள்ள குடும்பங்களில் 8% வீடுகளில் மட்டுமே கணிணி போன்ற மின்னனு சாதனம் மற்றும் இணைய இணைப்பு இரண்டும் உள்ளதால் மிக அதிக அளவில் கல்வியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட வாய்புள்ளதைப் பற்றியோ STARS திட்டத்திற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. இணைய வழிக் கற்றல் என்பது தற்போதுள்ள வகுப்பறை அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைக்கு கூடுதல் உதவியாக மட்டுமே  இருக்க முடியும். பெரும்பான்மை குழந்தைகள் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை பிரிவுகளிலிருந்து படிக்க வருவதினால் இணையக்  கல்வி முறையானது  வகுப்பறை அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் முறைக்கு மாற்றாக முடியாது.

5.8 கல்வி வெளிப்பாடுகள்(outcomes) மற்றும் சாதனைகளை மதிப்பீடு செய்வதற்கு “தகுதி அடிப்படையிலான” அமைப்புகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாக STARS கூறுகிறது. இருப்பினும் சாதி, அந்தஸ்து, பாலினம் மற்றும் மத ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு ஆகியவற்றை கல்விக் கொள்கைகளால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. தகுதி(merit) என்பது வெறும் சலுகையாக இருக்குமானால் அது அகற்றப்பட வேண்டும்.

6. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ள இந்திய அரசின் அரசியலமைப்புக்கு STARS திட்டம் ஒரு நேரடி சவாலாகும். அரசியலமைப்பு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய அரசின் கொள்கைகள் அனைவருக்குமான சமூக நீதி மற்றும் சமூக நலன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பொறுப்புகளை உலக வங்கியிடமோ அல்லது “அரச சார்பற்ற அமைப்புகளிடமோ” தள்ளிவிட முடியாது.

7. ஆகவே, உலக வங்கியுடன் இணைந்து STARS திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு செய்யக்கூடாது. மேலும் இத்திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து கடனாக எந்த நிதியையும் ஏற்கக்கூடாது என்று AIFRTE கோருகிறது.

நன்றி மற்றும் அன்புடன்.

[பேராசிரியர். ஜக்மோகன் சிங், தலைவர் AIFRTE;
Dr. விகாஸ் குப்தா, அமைப்பு செயலாளர் AIFRTE.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக