வியாழன், 30 ஜூலை, 2020

EIA 2020: சூழல் பயங்கரவாதச் சட்டம்! //நன்றி: இரா. மோகன்ராஜன் -புதியபரிமாணம்//

EIA 2020: சூழல் பயங்கரவாதச் சட்டம்!
//நன்றி:
இரா. மோகன்ராஜன்
-புதியபரிமாணம்//
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
TNREAJECTSEIA2020 என்ற குறியீட்டுச் சொல் சமூக வளைதளங்களின் முதன்மைப் பொருளாகியிருப்பதை, ஒரு எதிர்ப்புச் சொல்லாகியிருப்பதை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. நமது வாழ்விடங்களை, நமது நிலங்களை, நமது சூழலைவிட்டு நமது ஒப்புதல் இல்லாமல் சட்டங்களைக் காட்டி நம்மை வெளியேறச் சொன்னால், அவ்வாறு வெளியேற ஒருபோதும் சம்மதிப்பதில்லை. தற்போது நடுவணரசு கொண்டுவந்திருக்கும் சூழல்சார்ந்த வரைவறிக்கை அவ்வாறான வெளியேற்றத்திற்கான ஒன்று என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.


முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடுகள்
உலகமயப் பொருளாதார தாராளவாத முதலீட்டின் பகுதியாக நமது வளங்கள் ஏற்கனவே கொள்ளை போய்கொண்டிருக்கும் நிலையில், அவ்வாறான முதலீட்டினை, ஊக்கப்படுத்தவும், அதற்கு வழியமைத்துக் கொடுக்கவுமாக இருந்த சூழல் சார்ந்த அனுமதிக்கான அறிக்கையை நடுவணரசு திருத்தி அமைத்திருப்பதன் வழியாக பெருமுதலாளிகள் தமக்கு விருப்பமான இடங்களை, நிலங்களை அரசின் அனுமதியுடன், தற்போதய சூழல் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டே கையகப்படுத்திக் கொள்ள, கொள்ளையிட்டுக் கொள்ள நடுவணரசு தாராளமாக வழி அமைத்துக் கொடுத்துக் கொண்டுள்ளது.

திருடனை அழைத்து வருவதுடன் அல்லாமல் அவன் வீட்டில் புகுந்து கொள்ளை அடிப்பதற்காக நமது வீட்டுக் கதவுகளை நம்மைக் கேட்காமலே திறந்து வைப்பதை எப்படி புரிந்து கொள்கிறோமோ அவ்வாறே நடுவணரசு நம்மை, நமது வீட்டை, சுற்றுப்புறத்தைக் கொள்ளையடிப்பதற்கான முன் அனுமதியை, வீட்டுத் திறப்பை பெருமுதலாளிகள் என்ற கொள்ளைக் காரர்களுக்குத் தூக்கிக் கொடுத்துக் கொண்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் சூழல் மற்றும் வாழ்வாதாரச் சீர்கேட்டை சட்ட, நீதி நிறுவனங்களால்தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான், மக்கள் இயல்பாக எழுந்து திரண்டு போராடி 13 உயிர்களை பறி கொடுத்து 13 பேரின் குடும்பங்ளைத் தவிக்கவிட்டுத் தற்காலிகத் தடையேனும் பெற முடிந்தது.

இனி அப்படியான போராட்டங்களுக்கும், ஒன்றுதிரள்வதற்குமான எல்லா உரிமைகளும் பறிக்கப்படுவதுடன் பொது மக்களின் ஒப்புதலிலும், சம்மதத்திலுமே அவ்வாறான ஆலைகள் திறக்கப்படப்போகின்றன, அல்லது நமது ஒப்புதல் ஏதும் தேவைப்படாமலே அவை இயங்கப்போகின்றன. உயிர்களை இழந்து, குருதி சிந்திய போராட்டங்களை ஒரு சட்டக்காகிதம் முற்றாக துடைத்தழிக்கப் போகிறது.


இதுவரையிலுமாகச் சூழல் அறிக்கையில் இருந்த சூழல் சட்டப் பாதுக்காப்புகளில் திருத்தங்கள் செய்யப்படுவதன் வழி இந்த எதிர் கூறல்கள் மெய்யாகப் போகின்றன என்றால் கவலைப்படத்தான் வேண்டும். Environmtal Impact Assessment – EIA என்ற சுற்று சூழல் அறிக்கையில்தான் இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. முக்கியமாக இந்தத் திருத்தம் என்ன சொல்ல வருகிறதென்றால், சூழல் பாதுகாப்பு முக்கியமல்ல பெரு முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதே முக்கியமானதாகும். முன்பிருந்த சூழல்பாதுகாப்புச் சட்டங்களை வெளியேற்றியதன் வழி பாஜக அரசு இதை முதலாளிகளுக்கும், முதலீட்டிற்குமாக மாற்றி எழுதிக் கொண்டுள்ளது.

நாடும், வீடும், வீதிகளும் கொரோனா முடக்கத்திலிருக்கும் காலத்தில் வெறிநாயை அவிழ்த்துவிடுவது போல கொரோனா குறித்த அச்சங்களை அவிழ்த்துவிட்டு சூழல் மண்டலங்களை, நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்கச் சுதேசியம் பேசும் பாசக அரசு முயன்று வருவதன் ஒரு பகுதி தனியர்மயமாக்க பயங்கரவாத அரசியலே இந்தச் சட்டதிருத்தமாகும்.

விடுதலைக்கு முன்பும் பிரித்தானியர் காலத்தில் கட்டற்ற இயற்கை வளச் சுரண்டல் பல சட்டங்கள் வழியும் அது அல்லாத வழிகளிலும் கொள்ளையடிக்கப்பட்டுவந்தன. விடுதலைக்குப் பிறகாக சொந்த வீட்டையே கொள்ளையடிக்கும் நோக்குடன் இன்றைய அரசுகள் சட்டங்களைத் திருத்த முனைந்துள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சூழல் திருத்த அறிக்கையாகும்.

பிரித்தானியரின் கொள்ளைச் சட்டங்கள் போக விடுதலைக்குப் பிறகு இந்திய வளங்களையும், வனங்களையும் கண்காணிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட சூழல் தொடர்பான சட்டங்கள், குழுக்கள் என்பவை சுரங்கம், பெரும் அணைக்கட்டுக்கள், தொழிற்சாலைகள் போன்றவை இயற்கை வளங்கள் மீது செலுத்தும் தாக்கங்கள் குறித்து கண்காணிக்க அமைக்கப்பட்டன. 1986 சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெரு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க முறையான அனுமதி பெற வேண்டும் மேலும் இந்நிறுவனங்கள் 1994 இல் கொண்டுவரப்பட்டு 2006 இல் திருத்தப்பட்டிருந்த சூழலியல் மதிப்பீட்டுச் சட்டத்தின் கீழ் அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும்.


வசிப்பிடத்திலிருந்து தொழிற்சாலை, நிறுவனங்கள் அமைந்துள்ள பரப்பு, தொலைவு, சூழலியல் மண்டலம், கழிவுகளின் அளவு, கழிவு மேலாண்மை, சூழலில் அதன் தாக்கம் பற்றிய அறிக்கையை அவை இந்த சுற்றுச்கசூழல் சட்டங்களுக்கு அமைய அறிக்கை அளிக்க வேண்டும் இந்த அறிக்கையை அரசுக் குழு மதிப்பிட்டு ஆய்வு செய்து மறுக்கவோ, ஏற்கவோ செய்யும்.

தற்போது பாஜக அரசு கொண்டுவரும் திருத்த அறிக்கை முற்றிலும் பல மாறுதல்களுடன், தலைகீழ் அம்சங்களுடனும் உள்ளது. முக்கியமாக சூழல்பாதுகாப்பை முன் வைக்கும் அறிக்கையாக அல்லாமல் தொழில்பாதுகாப்பை முதன்மைப்படுத்தி அதன் வழியாக சூழல் பாதுகாப்பை மாசுபடுத்தி கேட்பாரற்று இயற்கை வளங்களைச் சுரண்டிச் செல்வதை உறுதிபடுத்துவதாக இருக்கிறது.

சூழல், மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு என இருந்த முந்தய சட்டங்களைத் திருத்துவதன் வழி இவற்றை நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது இன்றய பாஜக சுதேசி அரசு.

இந்த வரைவறிக்கையானது நீங்கள் சூழலை எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ, எவ்வளவு கனிம வளங்களை உங்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வழி கொள்ளையிட முடியுமோ அவ்வளவையும் முடித்துவிட்டு பிறகு நிதானமாகச் சூழலுக்கு எதுவித பாதிப்புமில்லை என்று அறிக்கை தரலாம் என்கிறது புதிய வரைவு திட்ட அறிக்கை (post-facto clearance).

புதிய வரைவின் படி,


1) மக்கள் ஒப்புதல் தேவையில்லை.

2) சுற்றுச் சூழல் தாக்க அறிக்கையை தொழில் நிறுவனங்கள் முன்பு ஆண்டுக்கு இரண்டு முறை என்பதை தற்போதைய அறிக்கை ஆண்டுக்கு ஒரு முறை என்று திருத்திக் கொண்டுள்ளது.

3) 2000 இலிருந்து 10000 ஏக்கர் நிலத்திற்குள் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு இத்திட்டத்தின் அனுமதி தேவையில்லை.

4) நடுவண், மற்றும் மாநிலங்களுக்கு என இரண்டு குழுக்கள் செயற்பட்டுவந்த நிலையில் நடுவண் குழு மட்டுமே இயங்கும் அதேசமயம் மாநிலக் குழுவை தேவைப்பட்டால் நடுவணரசு நியமிக்கும் ஆட்களே பணியாற்றுவார்கள்.

6) வல்லுநர் குழு இன்றியே தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ள முடியும்.

7)தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு எதுவித அனுமதியும் தேவையில்லை.

இந்த அறிக்கையின் மேற்கண்ட திருத்தங்களின் விளைவுகள் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. ஒரு பகுதியில் அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு அப்பகுதியின் மக்கள் அனுமதி பெற வேண்டிய தேவை அவசியம் என்பதை அடிப்படையிலேயே முற்றாக நிராகரிக்கிறது வரைவறிக்கை. பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பெருந்தடையாக இருந்த மக்கள் ஒப்புதல் என்ற முன்பிருந்த சட்டத்தைத் திருத்தவதன் வழி மக்களின் வாழ்வுரிமையையை பறித்தெடுக்கிறது.

இந்திய சட்டம் வகுத்தளித்துள்ள வாழ்வுரிமையை இந்தத் திருத்தம் முற்றாக நிராகரிப்பதுடன், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் கருத்து ஏற்புப் பதிவு நாட்களை30லிருந்து 20 நாட்களாக வெகுவாகச் சுருக்கிக் கொண்டுள்ளது. அதே போல கருத்துகணிப்புக்கான நாட்கள்45 லிருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பல தொழிற்சாலைகள் பகுதி மக்களிடம் கேட்காமலே கருத்துக் கணிப்பு நடத்தியதாகச் சொல்லி தமக்கு ஆதரவான ஆட்களை வைத்து கருத்துக் கணிப்பு நாடகங்களை அரங்கேற்றியதை கண்டிருக்கிறோம். குறிப்பாக புதுக்கோட்டை மற்றும் கதிராமங்களத்திலும் ஷெல்காஸ் நிறுவனத்தினர் அவ்வாறு செய்ததை மறந்திருக்க முடியாது. இனி இந்த நிறுவனங்கள் எதுவிதத் தடையுமின்றி செயல்பட முடியும். டெல்டாவின் எந்தவொரு பகுதியிலும் யாதொருவர் அனுமதியின்றியும் தமது கொள்ளையிடலைத் தொடர முடியும். அப்படித்தான் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

கூடங்குளம் போன்ற ஆபத்தான அணுமின் நிலையங்கள் தமது அணு உலைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் நிறுவிக் கொள்ள முடியும். அதற்கு யார் அனுமதியும் தேவைப்படாது. ஏற்கனவே இருக்கும் அனுமதியைக் காட்டியே நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக நான்காவது, அல்லது ஐந்தாவது என அடுத்தடுத்த உலைகளுக்கு பொதுமக்கள் கருத்துக்கள், ஏற்புகள், எதிர்ப்புகள் தேவையில்லை.

அப்படி எதிர்ப்பதற்கோ, திரள்வதற்கோ பொதுமக்களுக்கு உரிமையில்லை. அதற்கென நிறுவப்படும் அரசுக் குழுக்களே அவற்றை முன்னெடுக்கும். பொதுமக்கள் நீதிமன்றம் செல்ல உரிமை கிடையாது. அப்படி அரசு, நீதி நிறுவனங்களை மீறிப் போராட்டம் நடத்தும் மக்கள் மீது சட்ட நடவடிக்கையும், தேசத் துரோக வழக்கையும், தேசத்துரோகி பட்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நாட்டின் எந்த பகுதியையும் பெரு முதலாளிகளுக்குத் திறந்துவிட, மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படாது. 2006 சுற்றுசூழல் தாக்கல் அறிக்கையின் படி இயங்கிய மாநிலக்குழுக்களுக்கு இனி முழு சுதந்திரம் கிடையாது நடுவணரசின் ஆட்களே மாநில குழுக்களாக செயற்படுவார்கள். மாநிலத்தின் இயற்கை வளங்களை சுரண்டும் முழு அதிகாரம் இனி நடுவணரசுக்கானதாகும்.

ஏற்கனவே பழங்குடிகள் வதியும், கனிம வளங்கள் நிறைந்த வனப்பகுதிகள் சுரண்டப்பட்டதற்கு சுரண்டுவதற்கு இணையாக தற்போதைய அறிக்கை சமவெளிப் பகுதிகளை நோக்கித் திரும்பியுள்ளதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

குறிப்பாக சதுப்பு நிலங்களைக் கையகப்படுதி, மணல் போன்றவற்றை நிரவி அவற்றை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள இனி எதவித அனுமதியும் தேவையில்லை என்கிறது அது.இதைச் சற்றே விரிவுபடுத்தி வளமற்றக் காடுகள், காடுகளை ஒட்டிய புல்வெளிகள், என்பவற்றையும் பயனற்ற நிலங்கள் என்று காட்டி அவற்றை முற்று முழுதாக பகாசுர நிறுவனங்களால் விழுங்க முடியும்.

சதுப்பு நிலம் என்பது அரசு மற்றும் பெருமுதலீட்டு நிறுவனங்களின் காமாலைக் கண்களில் பயனற்றதாகவே கருதப்படுகிறது.

சதுப்புநிலம் என்பது சூழல் மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு, பல்லுயிரி பெருக்கத்திலும் முக்கியமாக நிலத்தடி நீர்வளத்தின் பெரும் பகுதி சதுப்புநிலத்தின் நீர்மையே காரணம் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அப்படியான சதுப்புநிலங்களைக் குறிவைத்து இந்ததிட்டம் வரையப்பட்டிருப்பது சூழல் மண்டலத்தின் மீதான மிகப்பெரிய வல்லுறவாகும். பயங்கரவாதமாகும்.

சதுப்ப நிலமானது தனது பரப்பளவு போல பத்துமடங்கு பரப்பளவு நீரை நிலத்தடியில் சேமிக்கக்கூடிய மிகப்பெரிய நிலத்தடி சுரப்பு மண்டலமாகும். இந்திய சுரண்டல் வர்க்கத்திற்கு சதுப்புநிலங்கள் என்பன குட்டிப் பாலைநிலமாகும்(waste land)  அவற்றை அவ்வாறே அவர்கள் பதிவேடுகளில் குறிப்பிட்டு வந்தனர். 1985-86 ஆண்டுகளில்தாம் நடுவணரசு, சதுப்புநில பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திட்டம் உருவாக்கப்பட்டு, நாட்டிலுள்ள 94 சதுப்பு நிலங்கள் அதன் கீழ் கொண்டுவரப்பட்டன அவற்றில் பள்ளிக்கரனை, கோடிமுனை உள்ளிட்டப்பகுதிகளும் அடங்கும்.

பள்ளிக்கரனைப் பகுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு 5ஆயிரம் எக்டேரில் பரந்துவிரிந்திருந்தது என்றால் நம்பமுடியுமா என்ன. அதன் காரணமாக அதன் சுற்றளவில் 50ஆயிரம் எக்டேருக்கு நிலத்தடி நீர் வளத்துடனும், செரிவுடனும் இருந்ததை ஆய்வாளாகள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்றைக்கு 500 எக்டேருக்கும் கீழே அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. சென்னை மாநகராட்சியின் குப்பைக் கிடங்காக ஒரு பக்கம், குடியிருப்பு சாக்கடைகள், சாலைகள் என மாறியிருக்கும், மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அதன் மூன்றில்ஒரு பகுதியை அரசு கையகப்படுத்த விரும்புகிறது. 2007 இல் பள்ளிக்கரனைச் சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த திட்ட அறிக்கை நடைமுறைக்கு வருமானால் மொத்தத்தையும் விழுங்க எந்தத் தடையுமிருக்கப்போவதில்லை.


அரசுகள் என்பன பன்னாட்டு நிறுவனங்களின் இடைத்தரகர்களாக மாறிவிட்ட நிலையில், நீதிக்கான இடம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்பதைத்தான் இந்தத் திட்ட அறிக்கையும் சொல்கிறது.
 காசுமீரில் நிலசட்டங்களைத் திரும்பப்பெற்றுக் கொண்டதும். வடக்குகிழக்கில் பழங்குடிகள் மட்டுமே நிலங்களை வாங்கவும், விற்கவும்முடியும் என்ற சட்டங்களில் செய்யப்பட்டத் திருத்தங்களும் இந்த வரைவு அறிக்கையுன் சேர்த்துப் புரிந்து கொள்ளலாம்.

இனி சார்க்கண்ட் மாநிலத்தில் பசுமை வேட்டை என்கிற பெயரில் வளங்களைச் சுரண்ட பெருமுதலாளிகளும், துணை காவல்படையினரும், அரச ஆதரவுடன் அமைத்த சல்வாஜுடும் போன்ற தனியானதொரு குண்டர் படைத் தேவைப்படப் போவதில்லை. இந்த அறிக்கை அதை மேலும் எளிமைப்படுத்திவிடும் அல்லது அரசே அந்த வேலையைச் செய்தவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்

கடல்சார்ந்த பகுதிகளை சூறையாடும் வகையில் கடல்பழங்குடிகளை வெளியேற்றி பன்னாட்டு சுற்றுல, சொகுசுவிடுதிகள் மற்றும் மீன்பிடி நிறுவனங்களிடம் பறித்துத் தரும் சாகர்மாலா திட்டம் போலவே அதன் பகுதியாகவே சமவெளி மற்றும் வனம் சார்ந்த பழங்குடிகளை,மக்களை வெளியேற்றும் வகையில் இந்த சூழல் தாக்கல் அறிக்கை வெளியாகிக் கொண்டுள்ளது.

முன்னைய காங்கிரசு அரசின் சுற்றுசூழல்துறை அமைச்சர் பல முரண்பாடானத் திட்டங்களைக் கொண்டுவந்து எதிர்ப்பின் காரணமாகத் திரும்பப் பெற்று கொண்டவராக இருந்தாலும் இந்த வரைவுத்திட்டம் அபாயகரமானது என்று கண்டித்திருப்பது முக்கியமானதாகும். ஜவடேகருக்கு அவர் கடிதம் எழுதியிருக்கும் அவர் இச்சட்டத்தைத் திரும்பப் பெற கோரிக் கொண்டுள்ளார்.மாநில சுற்று சூழல் குழுவை கலைப்பதன் வழி கூட்டாச்சி கொள்கையை சவப்பெட்டிக்குள் தள்ளிஆணி அடிக்கும் வேலையைச் செய்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வரைவு சட்டம் தான் ஏற்கும் சகலத்திட்டங்களையும் ‘தேசிய முக்கியத்துவம் அல்லது தேசிய நலன்’ என்று சொல்லிக் கொள்வதன் வழி அனைத்து பாதகமானத் திட்டங்களையும் முன் அனுமதியின்றிக் கொண்டுவர முடியும் என்பதற்குள் அடங்கியுள்ள பேரழி சதிக்கு நேரெதிராக இத்திட்டங்களை எதிர்ப்போர் தேசவிரோதி ஆக்கப்படுவர்!

ஆறுதல் தரும் ஒரே அம்சம் என்னவென்றால் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின் மீது கருத்துத் தெரிவிக்க விரும்புவோருக்கு ஆகஸ்ட் 11 வரையில் காலக் கொடு கொடுத்திருப்பதுதான். மேலும்,இந்த வரைவு அறிக்கையானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியாகியிருப்பதால் தென் மற்றும் தென் மேற்கு கிழக்கு மாநில மக்கள் இந்த அறிக்கையை படித்துப் புரிந்து கொள்ள வழியில்லாமல் செய்திருக்கும் அரசியல் பயங்கரவாதத்திற்கு எந்த மன்னிப்பும் இருக்க முடியாது.


ஐ.நாவின் சூழல் மாநாட்டிற்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைப் பார்த்து கண்ணீர் மல்க அறச்சீற்றத்துடன் சீறினாலே க்ரேட்டா துன்பாக் அவளது வார்த்தைகளில் சொன்னால், தயவு செய்து எங்கள் பருவத்தை, எதிர்காலத்தைத் திருடிவிடாதீர்கள்!” என்றுதான் இந்த அறிக்க்கையிட்டவர்களைப் பார்த்து சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக