சனி, 5 செப்டம்பர், 2020

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது! முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து...

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது! 

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து...

புதுதில்லி , செப் . 4 நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கைவிடப்பட்டிருப்பது . அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார் . 

இது தொடர்பாக இன்றைய ' தி இந்து ' நாளிதழில் கட்டுரை ஒன்றை அவர் எழுதி யுள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது : 

இந்திய மக்களாகிய நாம் , நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அரசமைப்புச்சட்டம் , நம்முடைய ஜனநாயகத்திற்காக , ஒரு நாடாளுமன்ற வடிவத்திலான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் , அதன்படி அரசாங்கம் நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப்பட்டது என்றும் வரையறுத்திருக்கிறோம் . அரசாங்கம் இவ்வாறு பொறுப்புடன் இருப்பது என்பதுதான் ஜனநாயக அரசாங்கத்தின் இதயமாகும் . இது நாடாளுமன்ற சட்டமன்றங்களின் நடைமுறைகள் மூலமாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது . நாடாளுமன்ற சட்டமன்றங்களின் நடைமுறைகள் என்பனவற்றில் சட்டமியற்றுதல் , நாட்டின் நிதிநிலைமைகளைக் கட்டுக்குள் வைத்தல் , வரி விதிப்புக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சனைகள் மீது விவாதங்கள் நடத்தல் முதலியனவுமாகும் , இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் , நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் நடைபெறுகையில் தினந்தோறும் அல்லது குறிப்பிட்டக் கால இடைவெளியில் , கேள்விகள் கேட்பதன் மூலமும் , ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொண்டு வருவதன் மூலமும் , கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலமும் , அரை மணி நேர விவாதம் நடத்துவதன் மூலமாகவும் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமாகவும் மற்றும் உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விஷயங்களை எழுப்புவதன் மூலமாகவும் நிறைவேற்றப்படுகின்றன . 

நாட்டின் நாடியை பிடித்துப் பார்க்க 

கேள்வி நேரம் என்பது அரசாங்கத்தைப் பொறுப்பாக்கும் கருவியாகும்.

 நாடாளுமன்ற சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் அரசாங்கத்தை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பாக்கும் கருவியில் மிகவும் முக்கியமானது கேள்வி நேரம் ' என்பதாகும் . நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு . இது அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் , அது உள்நாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி , கேள்விக்கு உள்ளாக்குகிறது . இதன்மூலம் நாட்டின் நாடியைப் பிடித்துப்பார்க்க அரசாங்கத்திற்கு இது உதவுகிறது . மேலும் இதன்மூலம் மக்களும் , தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் , அமைச்சர்களும் செயல்படும் விதம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும் . உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறும்போது தடுமாறுகிறவர்கள் அரிதாகவே மறக்கப்படுவார்கள் . 

கேள்விகள் பொதுவாக ஒரு பிரச்சனை குறித்துக் குறிப்பாகவும் , கறாராகவும் கேட்கப்படுவதால் அதன்மீது அரசாங்கத்திடமிருந்து சரியான தகவல் எதிர்பார்க்கப்படுகிறது . நம் நாடாளுமன்ற வரலாற்றில் பல கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில்கள் விரிவான அளவில் விவாதங்கள் நடத்திடவும் , விசாரணைகள் நடத்திடவும் , ஏன் , நிர்வாக ஊழல்களை வெளிக்கொண்டு வரவும் இட்டுச் சென்றிருக்கின்றன . 

எனவேதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிவார்ந்த குடிமக்கள் , நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . அதனால்தான் செப்டம்பர் 14 தொடங்கும் நடைபெறவிருக்கும் மழைக்காலம் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லை என்று செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள் , 

இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கியுள்ள நிலை என்று கூறப்பட்டிருக்கிறது .

பொருத்தமற்ற காரணம் 

கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டுவது பொருத்தமற்ற ஒன்று . இதனைக் கூறி , கேள்வி நேரத்தை நீக்கியிருப்பது திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை வெட்டிக் குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது . இப்போது , நட்சத்திரக் குறியல்லாத கேள்விகள் ( unstarred questions ) தொடரும் | என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது . எனவே கேள்வி நேரத்தில் நட்சத்திரக் கேள்விக்கு அமைச்சர் பதிலளிப்பதும் அதன்மீது துணைக் கேள்விகள் எழுப்பப்பட்டால் அவற்றுக்குப் பதிலளிப்பதும் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது . 

ஜனநாயகத்தின் செயல்பாட்டில் தன்னைச் சோதித்துப் பார்ப்பது என்பது , நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான திறமை தன்னிடம் இருக்கிறதா என்பதற்காகவேயாகும் . அது சமூகரீதியானதாகவோ , பொருளாதார ரீதியானதாகவோ அல்லது அரசியல்ரீதியானதாகவோ இருக்கலாம் . எத்தகைய நெருக்கடியாக இருந்தாலும் அதனைச் சரிசெய்யக் கோருவதுதான் ஜனநாயக நிறுவனங்களின் கடமைகளாகும் . அவ்வாறு கோருவதைத் தவிர்க்கும் விதத்தில் ஒருவிதமான தவிர்ப்பு அரசியலை ' ( ' politics of avoidance ' ) மேற்கொள்வது , எவ்விதத்திலும் உதவிடாது . 

இப்வாறு ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். ( ந.நி. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக