செவ்வாய், 5 டிசம்பர், 2017

புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டு:1 முதல் 11 வரை...


புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது 
துறைமுகப் பகுதியில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.
பகல் நேரங்கள் கருப்பு நிறத்துடன் கூடிய மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும், இரவு மற்றும் மேக மூட்டமாக உள்ள நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகள் மூலம் இந்த எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்கள்குறித்த விளக்கங்களின் விவரங்கள்...

1.ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.

 2-ம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.

 3-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

 4-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்துகின்றன.

 5-ம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

 6-ம் எண் கூண்டு, 5-வது எண்ணின் எச்சரிக்கைதான். ஆனால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

 7-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. 5, 6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.

 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், 'மிகுந்த அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

 9-ம் எண் புயல் கூண்டுக்கு, புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். மேலும் துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்துசெல்லும்.

 10-ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

 11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக