ஞாயிறு, 28 அக்டோபர், 2018

அரிசி அளவில் சிறிய கம்ப்யூட்டர் தயாரிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளனர். கடந்த 2014ல் முதல்முறையாக 2x2x4 மிமீ அளவிலான கம்ப்யூட்டரை கண்டுபிடித்திருந்தனர். அதற்கு ‘மைக்ரோ மோட்’ என்று பெயரிட்டிருந்தனர்.

இந்த மிகச்சிறிய கம்யூட்டர் முழுவதுமாக செயல்படக்கூடியதும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகும் தகவல்களைப் பெறக்கூடிய ஆற்றலும் கொண்டது. இந்நிலையில் ஐபிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒரே ஒரு உப்புக் கல்லை விட, மிகச்சிறிய சிப்பை உருவாக்கியது. இது 1 மிமீ நீளம் x 1 மிமீ அகலம் கொண்டது.




இந்த கம்ப்யூட்டர் 1990களில் உருவாக்கப்பட்ட சிபியு போன்ற செயல்திறன் கொண்டது. இந்த சூழலில் மிச்சிகன் பல்கலைக்கழகம் தற்போது 0.3 மிமீ x 0.3 மிமீ அளவிலான, ஒரேவொரு அரிசியை விட மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது.

டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்களில் மின் இணைப்பை துண்டித்து விட்டால், நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த செயல்பாடுகள் அனைத்தும் உள்ளடக்க மெமரியில் சேமித்து வைக்கப்படும். பின்னர் ஆன் செய்யும் போது, அனைத்து செயல்பாடுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.

ஆனால் இத்தகைய மிகச்சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வருவது சாத்தியம் இல்லை. எனினும் இந்த சிறிய கம்ப்யூட்டர்கள் வெப்பநிலையை அறிய உதவும் சென்சார்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எலக்ட்ரானிக் பல்ஸை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெப்பநிலையாக மாற்றுகின்றன.