வியாழன், 29 நவம்பர், 2018

மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டிக்காததால் பள்ளியிலும் பயன்படுத்துகிறார்கள் - ஆசிரியர்கள் கவலை

பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் மதுபானம் அறுந்துவதும், பள்ளியில் வன்முறையில் இறங்குவதும், டூவீலரில் சாகசம் புரிவதும், செல்போனில் மூழ்கி கிடப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதை பெற்றோர் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சிறுவர்களின் போக்கு திசை மாறும் விதமாக உள்ளது. டூவீலரில் அதிவேகமாக செல்வது விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஒட்டுவது என தொடர்கிறது. இதனால் எதிரே வரும் வாகனத்தில் மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. பெற்றோர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கின்றனர். போலீசார் பல்வேறு காரணங்களால் கெடுபிடி குறைத்தாலும் அதிகமாக சிறுவர்கள் வாகனங்களை ஒட்டி வருகின்றனர்.


மேலும் மாலை நேரங்களில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் கூட மதுபோதையில் திரிவதை காணமுடிகிறது. மறைவான இடங்களில் புகைப்பது, செல்போனில் ஆபாச படம் பார்ப்பது உள்ளிட்ட செயல்களும் நடக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் சொல்வதை கேட்பது இல்லை எனவும், அவர்களுடன் தகராறு செய்வதாகவும் தெரிகிறது. இப்படி சிறுவர்கள் கெட்டு சீரழிவதால் வரும் கால சந்ததியினர் அழிவை நோக்கி செல்வதாகவும் இதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் எனவும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமுக ஆர்வலர் ஜிப்ரி கூறியது, இளைய சமுதாயம் கெடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது செல்போன். இதை தாராளமாக பயன்படுத்த பெற்றோர் அனுமதிப்பதால் இன்று யாரையும் மதிப்பது கிடையாது. ஆசிரியர்கள்முதல் அனைவரிடமும் ஒருவிதமனப்போக்குடன் செயல்படுகின்றனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் பெற்றோர், ஆசிரியர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் பிள்ளைகள் நல்ல வழியில் செல்வார்கள். மேலும் மாலை நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார்.