வியாழன், 29 நவம்பர், 2018

தமிழக அரசு உத்தரவால் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு -சமக்ரசிக்ஷா



எண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்?: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு  
தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க சமக்ரசிக்ஷா நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இயங்கி வந்த அனைவருக்கும் கல்வி இயக்கம், மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய இரு மத்திய அரசின் திட்டங்களை ஒன்றாக இணைத்து தற்போது சமக்ரசிக்ஷா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டில் தொடக்க கல்விக்காக பராமரிப்பு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புவாரியாக எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதன்பேரில் தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இயங்கி வரும் மாநில திட்ட இயக்குநர் அளிக்கும் புள்ளி விவரங்களை பெற்றுக் கொண்டு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கி வந்தது. நடப்பு ஆண்டுக்கான பராமரிப்பு மானியம் கடந்த செப்டம்பர் மாதம் கிடைத்தது. 
இதற்காக மத்திய அரசுக்கு, சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய பட்டியலின்படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து 1 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் கொண்ட 3003 பள்ளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான பராமரிப்பு நிதி பெறுவதற்கான கணக்கெடுப்பை மாநில திட்ட இயக்குநர் நடத்தினார். அதில், தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரியவந்துள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பணியில் உள்ளனர். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பில் 10க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவது தெரியவந்துள்ளது.