வியாழன், 6 டிசம்பர், 2018

வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் & டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும்

வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும்போது தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் போது அவர்கள் செய்யும் தவறுகளில் போக்குவரத்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது. 

மூன்று முறைக்கு மேல் ஒரே தவறை செய்யும் பட்சத்தில் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற விதிகள் இருந்தும் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பாக நவம்பர் 19ம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது என்றார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.