புதன், 6 மே, 2020

மே 6, வரலாற்றில் இன்று.

‘MRI ஸ்கேனிங் கருவியின் தந்தை’ என போற்றப்படும்  பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் (Paul Christian Lauterbur) பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் சிட்னி நகரில் (1929) பிறந்தார். உள்ளூரில் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே அறிவியலில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இவர் பொறியாளராக வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். இவர் விஞ்ஞானியாக விரும்பினார்.

தன் வீட்டின் கீழ்ப்பகுதியில் சோதனைக்கூடம் ஒன்றை அமைத்தார். அறிவியல் ஆராய்ச்சிகளில் இவருக்கு இருந்த ஆர்வத்தை வேதியியல் ஆசிரியர் அறிந்துகொண்டார். எனவே, வகுப்பு முடிந்தவுடன் தனியாக பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதித்தார்.

கிளீவ்லேண்டில் உள்ள கேஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். 1950-களில் கட்டாய ராணுவச் சேவையில் சேர்ந்தபோது, அணுக்கரு காந்தப்புலம் (என்எம்ஆர்) தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட இவரது உயரதிகாரிகள் அனுமதித்தனர். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் முன்பு, 4 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

மேரிலேண்டில் உள்ள மெலோன் ஆய்வுக்கூடத்தில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

சில நிறுவனங்களின் ஆதரவுடன் என்எம்ஆர் கருவி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது பல்வேறு திட, திரவப் பொருள்களின் மூலக்கூறு கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய கருவியாகப் பயன்பட்டது.

இரு பரிமாணங்கள் கொண்ட படங்களை உருவாக்க இதை பயன்படுத்தலாம் என்பதை ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு காந்த அதிர்வு அலை வரைவு (எம்ஆர்ஐ) கருவியை மேம்படுத்துவதற்கான அடிப்படை ஆராய்ச்சியாக அமைந்தது.

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட் இதுகுறித்து ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டு வந்தார். அவர் இக்கருவியை நடைமுறை மருத்துவப் பயன்பாட்டுக்கான ‘எம்ஆர்ஐ’ ஸ்கேனிங் கருவியாக மேம்படுத்தினார். எம்ஆர்ஐ ஸ்கேனிங் கருவிக்கு அடித்தளமிட்டது மற்றும் அதை மேம்படுத்தியதற்காக இருவருக்கும் சேர்த்து 2003-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கதிர்வீச்சைப் பயன்படுத்தாமல், பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் மனித உள் உறுப்புகளை தெளிவாக காட்டக்கூடிய கருவி என்பது அதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. அதை சாத்தியமாக்கிக் காட்டியது, மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது.

எம்ஆர்ஐ கருவிக்கு இறுதி வடிவம் கொடுக்கத் தேவையான நிதியைத் திரட்ட இவருக்கு ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகின. அது முழு வடிவம் பெற்ற பிறகு, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு அதன் சாதகங்கள் பற்றி விளக்கிக் கூறினார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியோடு, ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார்.

ஆல்பர்ட் லாஸ்கர் விருது, ஹார்வே பரிசு, அறிவியலுக்கான தேசிய பதக்கம், தொழில்நுட்பத்துக்கான தேசிய பதக்கம் மற்றும் பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுள்ளார். ‘எம்ஆர்ஐயின் தந்தை’ என்று போற்றப்படும் பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் 78ஆவது வயதில் (2007) காலமானார்.