திங்கள், 29 ஜூன், 2020

*🌐ஜூன் 29, வரலாற்றில் இன்று:பிரபல இந்திய அணுசக்தி விஞ்ஞானியும், இந்திய அணுக்கருப் பிளவு சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவருமான பி.கே.அய்யங்கார் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 29, வரலாற்றில் இன்று.

பிரபல இந்திய அணுசக்தி விஞ்ஞானியும், இந்திய அணுக்கருப் பிளவு சோதனைகளில் முக்கியப் பங்காற்றியவருமான பி.கே.அய்யங்கார் பிறந்த தினம் இன்று.

திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1931).இவரது முழுப்பெயர், பத்ம நாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார். பள்ளிக் கல்வி முடித்ததும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 1963-ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலைய அணுசக்தித் துறையில் இளநிலை ஆராய்ச்சி விஞ்ஞானியாகத் தன் தொழில்வாழ்வைத் தொடங்கினார். நியூட்ரான் சிதறல் தொடர்பான பல்வேறு விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1954-ல் தொடங்கப்பட்டு, பிறகு ‘பாபா அணு ஆராய்ச்சி மையம்’ என பெயரிடப்பட்ட அணுசக்தி அமைப்பில் சேர்ந்தார்.

நோபல் பரிசு பெற்ற நெவில்லி புரோக்ஹவுஸ் என்ற விஞ்ஞானியின் வழிகாட்டுதலில் 1956-ல் கனடாவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவாறே பயிற்சியும் பெற்றார். அப்போது ஜெர்மனியத்தில் (germanium) லாட்டிஸ் இயக்கவியல் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.

அணுசக்தித் துறை ஆராய்ச்சிக் குழுவுக்குத் தலைமையேற்று, அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். பாபா அணுசக்தி நிலையத்தில் அணு உலை தயாரிப் பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

1960-ல் உள்நாட்டிலேயே பூர்ணிமா அணு உலையை வடிவமைத் தார். உத்தரபிரதேசத்தின் நாரோராவிலும் குஜராத்தின் கக்ராபாராவிலும் அணு உலைகளைத் தொடங்கினார். 1972-ல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் பொறுப்பை ராஜா ராமண்ணா ஏற்றபோது, இயற்பியல் குழுவின் இயக்குநர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

ராஜா ராமண்ணா தலைமையில் 1974-ல் பொக்ரானில் நடத்தப்பட்ட ‘சிரிக்கும் புத்தர்’ என்ற அணுகுண்டு வெடிப்பு சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றியில் இவரது பங்களிப்புக்காக 1975-ல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

1985-ம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஒரு இயக்குநராக முதன்முதலில் துருவா ரியாக்டரை கட்டமைக்கும் திட்டத்தைப் பொறுப்பேற்று, வெற்றிகரமாக நிறைவேற்றினார். மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் தொழில்துறையில் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க வழிவகுத்தார்.

இதற்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ‘டெக்னாலஜி டிரான்ஸ்பர் செல்’ என்ற பிரிவை ஆரம்பித்தார். 1990-ல் இந்திய அணுசக்திப் பேரவையின் குழுமத் தலைவராகவும் அணுசக்தித் துறையின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவராகவும் செயல்பட்டார்.

இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளிலும் (cold fusion experiments) முக்கியப் பங்கு வகித்தார். பதவி ஓய்வுக்குப் பிறகும் கேரள அரசின் அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டார். அகஸ்தியா சர்வதேச அறக் கட்டளையை நிறுவி, கிராமப்புறக் குழந்தைகளிடம் படைப்புத் திறன் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டார்.

இவரது அறிவியல் பங்களிப்புகளுக்காக பட்நாகர் விருது, இந்திய அறிவியல் அகாடமி விருது மற்றும் தேசிய அறிவியல் அமைப்பின் சோதனை இயற்பியலுக்கான பாபா பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி அணு விஞ்ஞானிகளில் ஒருவரான பி.கே.அய்யங்கார், 2011ஆம் ஆண்டு 80ஆவது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக