செவ்வாய், 14 ஜூலை, 2020

*🌐ஜூலை 14, வரலாற்றில் இன்று:கவிஞர் பழனி பாரதி பிறந்த தினம் இன்று.*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

கவிஞர் பழனி பாரதி பிறந்த தினம் இன்று.

பழ.பாரதி என்று தொடக்கக்காலங்களில் அழைக்கப்பட்டவர் பின்னாளில் தன் தந்தை சாமி பழனியப்பன் பெயரோடு இணைந்து “பழனிபாரதி” என்று அழைக்கப்படுகிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவரான பழனிபாரதி அவர்களின் தந்தை திரு சாமி பழனியப்பன் அவர்கள், பாரதியின் மீதிருந்த அதீத அன்பின் காரணமாய் இவருக்கு பாரதி என்று பெயர் வைத்தார். தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்டவர். ஆரம்பக்கால கட்டங்களில் பத்திரிக்கை ஆசிரியராக பணிபுரிந்தார். எம்ஜிஆர் அவர்கள் நடத்திய, வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய "தாய்" என்னும் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக தன் எழுத்துப்பணியை தொடங்கினார். பின்னாளில் சினிமாத்துறைக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு பாடலாசிரியராக தன்னை வடிவமைத்துக்கொண்டார். இப்போதும் கூட "தை" மாத இதழ் ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரை உவமைக் கவிஞர் சுரதா " பழநிபாரதி வருங்காலத்தில் ஒரு மகாகவியாக வருவான்" என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவிஞர். அப்துல் ரகுமான், கவிஞர்.வாலி மற்றும் கவிஞர்.அறிவுமதி ஆகியோரின் செல்லப்பிள்ளை கவிஞர் பழனிபாரதி. இளையராஜா . ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர் களுக்கு மட்டுமல்லாமல் சக கவிஞர்களுக்கும் பிடித்தவர்.

திரைப்படத் துறையின் இரும்புக்கதவை ஒரு சாமானியனும் திறமை இருந்தால் திறக்க முடியும் என எல்லோர்க்கும் முன்னுதாரணாக இருந்தவரும் இவரே...

கிட்டத்தட்ட 2000க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் பாடல் பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் வரும் "இளம்பிறை விழிகளில் வளர்பிறை கனவுகள் பெளர்ணமி ஆகிறதே..! மரங்களின் கிளைகளில் குயில்களின் ஸ்வரங்களில் சூரியன் மலர்கிறதே..!" என்ற பாடல்.

"காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது காற்றின் கையெழுத்து புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும். சமூகத்தின் பிரதிபலிப்பாக மிளிர்பவனே கலைஞன். இந்த வரையறையை உறுதி செய்கிறது பழநிபாரதியின் சமூகச் சாடல். மீசைக்கவிஞனின் பெயரைச் சுமப்பதாலோ என்னவோ... பன்னாட்டு ஊடுருவல் தொடங்கி பாலியல் மீறல்கள் வரை சாடித் தீர்க்கிறது பழநிபாரதியின் எழுத்து. ஒரு பாடலாசிரியராக வாழ்வியலின் மென்மையைப் பதிவு செய்யும் பழநிபாரதி தான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கவும் தவறவில்லை. இன்றைய வாழ்வின் இன்னல்களை, சமூக அவலங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் உருமாறிப்போகும் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை, கலாசார சீரழிவுகளைக் காற்றின் கையெழுத்தாக நம் நெஞ்சுக்குள் உள்வாங்கும் மூச்சுக்காற்றுபோல் உணர்த்துகிறார் பழநிபாரதி. சமூகத்தின் பன்முகத் தளங்களிலும் ஊடுருவி, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரை பலருடைய பிரதிபலிப்புகளையும் இந்த நூல் பந்திவைக்கிறது. ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் இலையாக, இவரின் காற்றின் கையெழுத்து சகல திசைகளிலும் உங்களை இழுத்துச் செல்லும்!

"உங்கள் பெயரில் பாரதி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கீழ் வரும் பதிலை அளித்துள்ளார்.

"என்னுடைய அப்பா கவிஞர் சாமி பழனியப்பன், கவிஞர் பாராதிதாசனின் மாணவராகவும், உதவியாளராகவும் இருந்தார். பாரதியார் மீதும் அதிக பற்றுக்கொண்டிருந்தார். அதனாலேயே எனக்கு 'பாரதி' என பெயர் வைத்தார். தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்குமே தமிழ் பெயர்தான். பள்ளி பருவத்திலேயே அப்பாவின் பெயரின் சுருக்கமாக 'பழபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன். ஒருமுறை கவிஞர் அறிவுமதிதான், 'பழனிபாரதி' என உன் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்குமே என சொல்ல, பின்னர் நானும் 8-ம் வகுப்பு படிக்கும்போது 'பழனிபாரதி' என பெயரை மாற்றிக்கொண்டேன்.

என்னுடைய சிறுவயதில் ஒருநாள் அப்பாவுடன் வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 'கவிதை எப்படி எழுதணும்'னு அப்பாவிடம் கேட்டேன். சொல்கிறேன் எனச் சொன்னவர், வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் கவிதை நூல்களை எனக்குக் கொடுத்தார். படித்துப்பார்...புரியாதவைகளை மட்டும் கேள் எனச் சொன்னதோடு, இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொன்னார். அப்படி சிறுவயதிலேயே எனக்கும் பாரதியார், பாரதிதாசன் இருவரின் மீது மிகுந்த பற்று ஏற்பட்டது. அதனுடன் அவர்களைப்போல தவறான பாதையில் செல்லாமல், மனநிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." என்று சொன்னார் பழனிபாரதி.

இவர் பெற்ற சில விருதுகள்
--------------------------------------------

சிறந்த பாடலாசிரியர் விருது(சினிமா எக்ஸ்பிரஸ் ) - 1996

சிறந்த பாடலாசிரியர் விருது(தமிழ்நாடு சினிமா விருதுகள்) - 1997

கலைமாமணி - 1998

கலைவித்தகர் - 1998

இளையராஜா இலக்கிய விருது - 2007

புரட்சிக்கவிஞர் விருது

பழனிபாரதி எழுதிய சில புத்தகங்கள்

நெருப்புப் பார்வைகள்

வெளிநடப்பு

காதலின் பின்கதவு

மழைப்பெண்

முத்தங்களின் பழக்கூடை

புறாக்கள் மறைந்த இரவு

தனிமையில் விளையாடும் பொம்மை

தண்ணீரில் விழுந்த வெயில்

வனரஞ்சனி

உன் மீதமர்ந்த பறவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக