ஞாயிறு, 19 ஜூலை, 2020

*🌐ஜூலை 19, வரலாற்றில் இன்று:சிப்பாய் புரட்சிக்கு வித்திட்ட மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று.*

ஜூலை 19, வரலாற்றில் இன்று.

சிப்பாய் புரட்சிக்கு வித்திட்ட மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று.

1827, ஜூலை 19 -இல் பூமிஹார் பிராமண வகுப்பில் உத்தரபிரதேசத்தில்,  பல்லியா மாவட்டம், நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார் மங்கள் பாண்டே. 

1849-இல் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்ந்தார். மிக ஒழுக்கமான இளைஞர். கொல்கத்தாவின் பாரக்பூர் எனும் இடத்தில் சிப்பாய்கள் கொந்தளிப்புடன் இருப்பதாக , லெஃப்டினென்ட் பாக்கிற்கு செய்தி வருகிறது.  உடனே குதிரையில் ஏறி புறப்பட்டான் பாக்.  மங்கள் பாண்டேவைப் பற்றி பாக்கிற்குச் சொல்லப்பட்டது.

மங்கள் பாண்டே குறி பார்த்துச் சுட, பாக் தப்பித்தான்.  குதிரையைப் பதம் பார்த்தது புல்லட். குதிரையும், மேலிருந்த அதிகாரியும் கீழே விழ, தன் வாளால் பதம் பார்த்தான் பாண்டே. மற்றொரு சிப்பாய் ஷேக் பல்டு தலையிட்டு, பாண்டேவை கட்டிப் பிடித்தான். இதனிடையே சார்ஜென்ட் மேஜர் ஹீயூசன் மங்கள் பாண்டேவால் தாக்கப்பட்டார்.

ஹூயூசன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாண்டேவை, மற்றவர்கள் பிடித்துக் கொடுக்க வேண்டும் என கதறி வேண்டுகோள் விடுத்த பல்டுவை ஏனைய சிப்பாய்கள் மறுத்து, சுட்டு விடுவதாக மிரட்டினர். பல்டுவுக்கும் காயம்;  பாக், ஹியூசன் ஆகியோருக்கும் அடி பலம். காமாண்டிங் ஆபீஸர் ஜெனரல் ஹியர்சே வருகிறார். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ‘எல்லோரும் மங்கள் பாண்டேவைப் பிடிக்க உதவ வேண்டும். இல்லையேல்
அவமதிக்கும் முதல் மனிதனைச் சுட்டு விடுவேன்’ என மிரட்டுகிறார்.

பாண்டே நிலமையைப் புரிந்து கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள, ரத்த வெள்ளம். அடி பலம் என்றாலும் உயிருக்குப் பாதகம் இல்லை. நட்ந்தது  விசாரணை. விடுவானா வெள்ளைக்காரன்? தூக்கு தண்டனை கிடைத்தது.  அன்று ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டுக் கிடந்த பாரதத்தில் அது தான் கதி. அரசை எதிர்த்தால் தூக்குதான்.

ஆனால் மங்கள் பாண்டேவுக்கு   மக்களிடத்தில் இருக்கும் வரவேற்பை மோப்பம் பிடித்தது ஆங்கில அரசு. ஊர் அறிய தூக்கிவிட்டால் பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என யூகித்து, குறித்த நாளுக்கு ஒரு வாரம் முன்பே யாருக்கும் தெரியாமல் தூக்கில் தொங்க விட்டது பிரிட்டீஷ் அரசு.

ஒரு சிறு பொறி தான் மங்கள் பாண்டே. அக்னிக் குஞ்சினை பொந்திடை வைத்தாயிற்று. வெந்து தணிந்தது காடு. அது தான் முதல் இந்திய சுதந்திரப் போர் (1857).

துப்பாக்கி புல்லட்டில் பன்றிக் கொழுப்பும், மாட்டு இறைச்சியும் தடவித் தந்ததாக சிப்பாய்கள் மத்தியில் பரவியது செய்தி. ஏற்கனவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு வதந்தி பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. இந்தியர்களின் மனநிலையை பாதிக்க வேண்டும் என்ற துர் எண்ணத்துடன் ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டனர் என நம்மவர்கள் நம்பினர்.

மாட்டுக் கொழுப்பு என்பதால் ஹிந்துக்களும், பன்றிக் கொழுப்பு என்பதால் இஸ்லாமியரும் மனம் புண்பட்டனர், வெறுத்தனர்;  கிளர்ந்து எழுந்தனர்.  ‘சிப்பாய் மியூட்டினி’  (சிப்பாய் கலகம்) என வரலாறு பதிவு செய்து கொண்டது. அதுவே முதல் இந்திய சுதந்திரப் போர் ஆகும். அதற்கு வித்திட்டவர்  மாவீரர் மங்கள் பாண்டே.

1857, ஏப்ரல் 8-ம் நாள் பாரக்பூரில் தூக்கிலிடப்பட்ட போது மங்கள் பாண்டேவுக்கு 29 வயது! அவரை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு ஒரு நினைவு தபால் தலையை  1984 அக்டோபரில் வெளியிட்டது. கொல்கத்தாவில் பாண்டே நினைவாக ஒரு பூங்கா எழுப்பப்பட்டது.

இந்த தனிமனிதன் காட்டிய வீரம், எதிர்ப்பு, நியாயமான கோபம் – இவை எளிதில் பற்றிக் கொண்டது அன்று எல்லோரையும். ஆங்கிலேயர்களை உரசிப் பார்க்கும் துணிவை நமக்குத் தந்தவனான அந்த "தனி ஒருவன்" மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக