வியாழன், 7 மே, 2020

மே 7, வரலாற்றில் இன்று.

நடிகை ப.கண்ணாம்பா நினைவு தினம் இன்று(1964).
 
மு. கருணாநிதியின் 'மனோகரா' திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார்.

1927-ம் ஆண்டு கண்ணாம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார்.

இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934-ல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியா முழுவதும் நாடகங்களை நடத்தி வந்தார்கள்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார்.

1938-ல் பி. என். ரெட்டி தயாரித்த கிரலட்சுமி படத்தில் நடித்தார். கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் (பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது.

அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார். கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

இவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி காலமானார்.