வியாழன், 7 மே, 2020

மே 7, வரலாற்றில் இன்று.

ராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் இன்று(1814).

கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது.

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப்
படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட் எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)
பரதகண்ட புராதனம்.