புதன், 29 ஜூலை, 2020

ஜூலை 29, வரலாற்றில் இன்று.தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று.

ஜூலை 29,
வரலாற்றில் இன்று.
               
தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும்,  பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில்  முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று.
 

திருச்சி மாவட்டம் கொல்லிமலைப் பகுதி, பாலகிருஷ்ணன்
பட்டியில் 1890ஆம் ஆண்டு ஜூலை 29இல் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பின்னங்குடி சா.சுப்ரமணிய சாஸ்திரி.

 திருச்சி நேஷ்னல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு எஸ்.பி.ஜி (தற்போதைய பிஷப் ஹீபர் கல்லூரி) கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பை முடித்தார். திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி
யிலும், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார்,

  மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் ,  சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நீலகண்ட சாஸ்திரி, எஸ்.குப்புசாமி போன்ற பேராசிரியர்களிடம் மாணவராக இருந்து,  தமிழ், சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றார். ”தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப்” பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

 சென்னைப் பல்கலைக் கழகத்தில், இதே தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார்.     தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ,  திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார்.

தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார்.  குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. காஞ்சி சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்று,  பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத்  தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார்.       புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை  இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார். 

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.    40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி
மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும் எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார்.

ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை, திருவையாறில் ,  தொடர்ந்து  திருக்குறள் வகுப்பு நடத்தினார்.      எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாள்களைக்  கடத்தினார்.

 இன்றைய சூழலில் , பல இடங்களில்  முனைவர் பட்டம் என்பது விலை கொடுத்து  வாங்கும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. முன்னோர் நூல்களையெல்லாம்  முறையாகப் பயின்று, முழுதாக முனைந்து,  முனைவர் பட்டம் பெற்ற முதல் அறிஞர் பி.சா.சு என அன்போடு அழைக்கப்படும் சுப்ரமணிய சாஸ்திரியை நினைவு கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே ஆகும்.

                      ஆம்,   தமிழில்  ஆய்வுகள் இன்னும் விரைவாய் முன் நகர வேண்டும்.     இந்நாளில்,    பிற மொழியின் நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திடவும், நாம் வளர்த்த கலைச் செல்வங்களை    உலக மொழிகளுக்கு வழங்கிடவும் பன்மொழிப் புலமை பெற்ற அறிஞர்களின் தேவையை உணர்ந்திட வேண்டும்.

மொழி- ஒருபோதும்  தேங்கி விடக்கூடாது. வற்றாத நதி போல- பருவத்தில் - முற்றாத இளங்கொடி போல- தழைத்தோடிக்
கொண்டே இருக்கவேண்டும். தேவை உணர்வோம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக