வியாழன், 23 ஜனவரி, 2020

ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இன்று.



போர் சூழலில் நேதாஜியின் வியூகங்களும், தாக்கும் முறைகளும் நேர்த்தியானவை, தந்திரம் மிக்கவை. இவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது, ஓடி ஒளிந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் பிறந்தார். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இவருடைய குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர்தான் சுபாஷ் சந்திரபோஸ். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்
தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.

எனினும் அக்காலத்தில் இந்தியாவின் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட நேதாஜியின் சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது லண்டனுக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஆனாலும் தாய் நாட்டின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பிற்காலத்தில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரானர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பினார்.

அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது. துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட வைத்தது.

போர் சூழலில் நேதாஜியின் வியூகங்களும், தாக்கும் முறைகளும் நேர்த்தியானவை, தந்திரம் மிக்கவை. இவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது, ஓடி ஒளிந்தது. ஆனாலும் உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் இன்னும் மர்மாகவே நீடிக்கிறது.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985ல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் இன்றும் இவருடைய மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்" எனும் இவர் பெயரை இன்னமும் உச்சரிக்கும் போதெல்லாம் உடம்பெல்லாம் சிலிர்க்கத்தான் செய்கிறது.

நேதாஜியின் இறுதி உரை  

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகஸ்ட் 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதில்

"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"