வியாழன், 23 ஜனவரி, 2020

சனவரி 22 ~ சனவரி 22,2019 ஆம் ஆண்டு நாள் மறக்க முடியாத நாள்...

சூலை 2, 2003 ஆம் ஆண்டு நாள்(டெசுமா) போன்று தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர் அமைப்புகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாள் இந்த சனவரி22,2019 ஆம் ஆண்டுநாள்.

2019சனவரி 22 இல் தொடங்கிய ஜாக்டோ-ஜியோ  காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தின் முதலாம் ஆண்டு நாள்.

ஓராண்டு காலத்திற்கு முன் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கிய நாளில் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசூழியர்களின் கோரிக்கைகள் என்னவாக இருந்ததோ?!எவ்வளவாக இருந்ததோ ?!அவைகள்
அதே நிலையில்,
அதே அளவில்,
அதே வகையில் அப்படியாகவே தான் இன்றும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில்,
போராட்டத்திற்கு பிந்தையகாலத்தில் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது எனலாம்.

போராட்டக்காலக் கோரிக்கைகள் அப்படியே
நிலை மாறாது,
நிறம் மாறாது இருப்பதற்கு யார்காரணம்?!எவர் காரணம்?!எது காரணம் ?!என்பது மில்லியன் டாலர் கேள்வி?!

தமிழகரசா? ஆசிரியர் -அரசூழியர்களா?,ஆசிரியர் -அரசூழியர் அமைப்புகளா?காவல்துறையா?நீதிமன்றமா?
சமூக ஆர்வலர்களா?பொதுமக்களா?அரசியல் தட்பவெப்ப சூழ்நிலையா?என்பதெல்லாம் ஆய்வுக்குரியதாகும்; ஆராயப்படவேண்டியதாகும். 

எவை எப்படி ஆயினும், இக்கால வரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று பங்களிப்புச் செய்துள்ள ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சுயநலவாதிகள் அல்ல;
பொதுநல வாதிகளே!தியாகச்சீலர்களே!

தமிழ்நாட்டின் பொதுக்கல்வி முறை காப்பற்றப்பட வேண்டும்.
கல்வித்துறை சீர்திருத்தங்கள் என்றபெயரில் தொடக்கக்கல்வித்துறையை அழிப்பதைக் கைவிட வேண்டும்.  பள்ளிகள் மூடப்படுவது கைவிடப்பட வேண்டும்.
சத்துணவு மையங்கள் இழுத்து சாத்துவது தடுக்கப்பட வேண்டும்.
வேலைநியமனத் தடைச்சட்டத்திற்கு இணையான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி போராடிய     சமூகப் போராளிகள் தமிழகத்தில்  இவர்களே!

இவைகளோடு   இச்சமூகப் போராளிகளின் போராட்டங்கள், தியாகங்கள் முடிந்துவிட வில்லை.

மக்களாட்சி நாட்டில் மக்களுக்கான கோரிக்கைகளை  வலியுறுத்தி மக்களின் ஒருபகுதியாக ஆசிரியர்-அரசு ஊழியர்கள் போராடியற்காக காவல்துறையின் கைதுநடவடிக்கைகள்,
காவல் துறையின் தேடுதல் வேட்டைகள்,
தலைமறைவு வாழ்க்கைமுறைகள் ,
முன் எச்சரிக்கை கைதுகள், இடமாறுதல் மிரட்டல்  நடவடிக்கைகள், ஒழுங்குநடவடிக்கை எச்சரிக்கைகள், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறச்செய்தல்,
மத்திய சிறைச்சாலையில் கைதி வாழ்க்கை வாழ்தல், தெருப்போராட்டம் நீதிமன்றப் போராட்டமாக திசைமாறி பிணைக்கோரும் நிலையிலான  நடவடிக்கைகள், எந்த அரசிடம் கோரிக்கை வைத்தோமோ ,
எந்த அரசின் முன் நெஞ்சுரத்துடன் போராட்டம் தொடங்கினோமோ அந்த அரசிடமே பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுக!என்று கோரும் செயல்பாடுகள் என்று போராட்டம்  திசைமாறி பள்ளி-அலுவலகம் திறக்கப்பட்டு
முழுவேகத்துடன் செயல்படுவது கூட அறியாது சிறைச்சாலைகளில் வாடி வதங்கிய தியாகச்செம்மல்கள் இவர்கள்!

எல்லாக்கோரிக்கைகளையும் தமிழக அரசின் செயலாளர்களிடம்,துறைத்தலைவர்களிடம்,அமைச்சர் பெருமக்களிடம் எடுத்துரைத்து ,
முதலமைச்சரின் சந்திப்புக்கு
தவமாய் தவமிருந்து இருந்தும் அரசின்,
ஆட்சியாளர்களின் பாராமுகத்துடனே மீளப்பணியமர்வு பெற்று ,
குற்றக்குறிப்பாணைக்கு விளக்கமளித்துக்கொண்டே இன்றுவரையிலும்  உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கும் பொறுமைசாலிகள் மட்டுமல்ல  பெருமைக் குரியவர்கள் இவர்களே!

போராட்டக்காலத்திற்கு ஊதிய வெட்டு,
ஆண்டு ஊதிய உயர்வு இழப்பு,
பதவி உயர்வு மறுப்பு,
தேர்வுநிலை-சிறப்பு நிலை பறிப்பு என்று கழுத்துக்கு மேல் தொங்கும் எல்லாக்கத்திகளுக்கும் உழைப்பினை, வியர்வையை, குருதியை என்று தனித்தனியாக சொல்ல முடியாத வகையில் உடல்,பொருள், ஆவி  அனைத்தையும்  போராட்டத் வேள்வியின் அகோரப்பசிக் கொண்ட பெருநெருப்புக்கு படைத்துள்ள தியாகமிகு தேசப்பக்தர்கள் இவர்களே!

இத்தேசப் பக்தர்களும்,
இவர்களது குடும்பத்தினரும் அடைந்துள்ள எல்லா வகையான  இழப்புகளும், சிரமங்களும்,
துன்ப-துயரங்களும்  ஈடுசெய்யமுடியாதவைகளாகும்.

 இத்தகு மனிதப்புனிதர்களால் தான் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் சமுதாயம்
இன்றும் எல்லாவகையான பாதுகாப்புகளுடன் சமூக-அரசியல்-பொருளாதார கெளரவத்துடன், சுயச்சார்போடு ஓரளவிற்கேனும் சிறப்புமிகு வாழ்க்கையில் பயணிக்க முடிகிறது;இயலுகிறது எனலாம்.
இது வெறும் மிகையில்லை.

இத்தியாகச் செம்மல்களின் இழப்புகள் அனைத்தும் மீட்டெடுத்துத் தரப்படவேண்டும்!
இதுவே நம் முன் உள்ள தலையாயக் கடமையாகும்.  போராட்டக்காலக்கோரிக்கைகள் அனைத்திற்கும் அரசாணை பெறப்படுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
இவைகளே!இக்காலவரையற் ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும் செலுத்தும் வீரமிகு-பெருமைமிகு அஞ்சலியாகும்!
இத்தியாகிகளின் குடும்பத்தினரின் பெருந்தியாகத்திற்கு  செலுத்தும் நன்றிகடனாகும்;பெரும்மரியாதையாகும்!
#சங்கநாதம் முழங்கட்டும்!
-முருகசெல்வராசன்.